Munishkanth: சினிமாவுக்காக திருமணத்தை உதறிய முனீஸ்காந்த்.. உண்மையைச் சொன்ன மாமன் பட இயக்குநர்!
சென்னை: சினிமாவிற்கு உண்மையாக இருந்தால் வெற்றி நிச்சயம் என பலரும் தெரிவித்துள்ளார்கள். சினிமாதான் தனது வாழ்க்கை என தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தாமல், சினிமாவிற்காக இருக்கும் பலரும் இருக்கிறார்கள். குறிப்பாக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவைக் கூறலாம். ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பலரும் அவரிடம் கேட்டபோது, காதல் மற்றும் திருமணம் என்பது ஒரு கமிட்மெண்ட். அதில் மிகவும் அக்கறையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிலையில் சினிமாவிற்காக தனது திருமணத்தையே உதறிவிட்டு வந்துள்ளார், நடிகர் முனீஸ்காந்த். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த புரூஸ்லி, விமல் நடித்த விலங்கு வெப் சீரிஸ் போன்றவற்றை இயக்கியவர், இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ். இவரது இயக்கத்தில் வரும் 16ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் மாமன். இந்த படத்தின் கதையை எழுதி நடித்துள்ளார் நடிகர் சூரி. இந்த படத்தின் மூலம் கதாசிரியராகவும் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில் சூரியுடன், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, நடிகை சுவாசிகா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் வரும் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் முனீஸ் காந்த் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிகர் முனீஸ் காந்த் குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பலருக்கும் ஒருவர் சினிமாவுக்காக இப்படி எல்லாம் செய்வாரா என்று ஆச்சரியத்துடன் பேசி வருகிறார்கள்.

முனீஷ்காந்த்: இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் அளித்த பேட்டியில், " முனீஷ்காந்த் என்னிடம் ஒன்று சொன்னார். சினிமாவை நீங்கள் எந்த அளவுக்கு காதலிக்கிறீர்களோ அந்த அளவுக்கு சினிமா உங்களை கைவிடாது என்று கூறினார். நாங்கள் ஒரு குறும்படம் எடுத்தோம். அந்த குறும்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தான் அவர் நடித்திருந்தார். அவரை டப்பிங்கிற்காக அழைக்க நான் அவருக்கு போன் செய்தேன்.
அர்ப்பணிப்பு: என்னிடம் பேசிய அவர் தான் ஊரில் இருப்பதாகவும் இன்று இரவுக்குள் வந்து விடுவதாகவும் தெரிவித்தார். அதேபோல் இரவே வந்துவிட்டார். அவரைப் பார்த்தால் எல்லாம் பெயிண்ட் மற்றும் சுண்ணாம்பாக அவரது உடல் முழுவதும் இருந்தது. நான் ஊருக்குப் போனேன். ஆனால் என்னை யாரும் திருப்பி அனுப்பவில்லை. ஊரிலேயே கடை வைத்து தருவதாகவும், திருமணம் செய்து வைப்பதாகவும் தெரிவித்தார்கள். மேலும் பெண் பார்க்க எல்லாம் போய்விட்டோம். அந்த பெண்ணுக்கும் என்னைப் பிடித்துவிட்டது.

திருமணம்: பெண் வீட்டார் எங்கள் வீட்டிற்கு வருவதாகச் சொன்னார்கள். அதனால்தான் வீட்டிற்கு பெயிண்ட் அடித்துக் கொண்டு இருந்தோம். அப்போதுதான் நீங்கள் போன் செய்தீர்கள். நான் வீட்டிலேயே குளித்துவிட்டு கிளம்பினால் கண்டுபிடித்துவிடுவார்கள். அதனால்தான், ஆடைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, டீ குடிக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன் என்று கூறினார். நான் உடனே, அப்படினா உங்கள் திருமணம் என்று கேட்டேன். அதற்கு அவர், அவ்வளவுதான், இதற்கு மேல் நான் ஊருக்குப் போனால் விடமாட்டார்கள் என்று கூறினார். சினிமா மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அதுவும் ஒரு குறும்படம் டப்பிங்கிற்காக ஒரு மனிதன் இந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறாரே என்று வியந்து போனேன். ஆனால் குறும்படத்தில் டப்பிங் பேசியதைப் பார்த்த பின்னர்தான் அவருக்கு முண்டாசுப்பட்டி படத்தில் முனீஸ்காந்த்தாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் இருந்து தான் அவரது வாழ்க்கையே மாறியது" என்று கூறினார். முனீஸ்காந்த் கடந்த 2018ஆம் ஆண்டு தேன்மொழி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications