Maamannan: மாமன்னன் 50வது நாள்... வெற்றியை சமர்பித்த மாரி செல்வராஜ்... யாருக்குன்னு தெரியுமா..?
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் ஜூன் 29ம் தேதி ரிலீஸானது. உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்ததை அடுத்து அதன் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதுகுறித்து நெகிழ்ச்சியுடன் டிவிட் போட்டுள்ள மாரி செல்வராஜ், மாமன்னன் வெற்றியை தனது பெற்றோருக்கு சமர்பித்துள்ளார்.

மாமன்னன் 50வது நாள் வெற்றி : மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படம் மாமன்னன். ஜூன் 29ம் தேதி ரிலீஸான இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. மாரி செல்வராஜ் வழக்கமாக தனது அடையாள அரசியல் மூலம் சமூகநீதி பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைப் போல மாமன்னனும் அதிக கவனம் ஈர்த்தது.
முன்னதாக மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில், தேவர் மகன் படம் குறித்து மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையானது. சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்றிருந்த நிலையில், அவர் முன்பே மாரி செல்வராஜ் துணிந்து பேசியிருந்தார். தேவர் மகன் படத்தில் வரும் இசக்கி கேரக்டர் தான் மாமன்னன் எனவும், எனது அப்பாவை மனதில் வைத்தே இப்படத்தை இயக்கியுள்ளதாகவும் பேசியிருந்தார்.
மாரி செல்வராஜ்ஜின் இந்த பேச்சு கடும் வைரலானதோடு, சமூக வலைத்தளங்களில் சர்ச்சையையும் கிளப்பியது. இதுவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. அதன்படி மாமன்னன் படம் பாக்ஸ் ஆபிஸிலும் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ஃபஹத் பாசிலின் ரத்னவேல் கேரக்டரை சில சாதிய அமைப்புகள் பல பாடல்களுடன் எடிட் செய்து வைரலாக்கினர்.
அதேபோல், தொடர்ச்சியாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த போதே நெட்பிளிக்ஸ் தளத்திலும் மாமன்னன் வெளியானது. ஓடிடி ரசிகர்களிடம் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த போதும், இன்னும் திரையரங்குகளில் ஓடி வருவது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இப்படத்தின் 50வது நாள் வெற்றிக் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உதயநிதி, வடிவேலு, ஏஆர் ரஹ்மான், இயக்குநர் மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் உட்பட மாமன்னன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் அனைவருக்கும் 'பறக்கும் பன்றி' விருது வழங்கப்பட்டது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், மாமன்னன் படத்தின் வெற்றி குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் ட்வீட் செய்துள்ளார். அதில், "மாமன்னன் 50 வது நாள். பெருந்துயர் வாழ்வுதான் என்றாலும் அதற்குள் அறத்தையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இந்த அளப்பரிய வெற்றியை சமர்பிக்கிறேன். உண்மையை கேட்ககூடிய காதுகளை நான் தேடிகொண்டே இருப்பேன்" என பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது அம்மா, அப்பாவுடன் இருக்கும் கறுப்பு வெள்ளை புகைப்படத்தையும் தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் மாரி செல்வராஜ். அவரின் இந்த டிவிட்டர் பதிவு ரசிகர்களிடம் அதிக கவனம் ஈர்த்துள்ளது. முன்னதாக மாமன்னன் படத்தின் வெற்றியை பாராட்டிய உதயநிதி, மாரி செல்வராஜ்ஜுக்கு மினி கூப்பர் கார் பரிசளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











