Maamannan: இன்று மாலை மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிள்... போஸ்டரில் கலங்கடிக்கும் வடிவேலு!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
ராசா கண்ணு எனத் தொடங்கும் இந்தப் பாடலை ஏஆர் ரஹ்மான் இசையில், வடிவேலு பாடியுள்ளார்.
இந்தப் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தற்போது படக்குழு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

இந்த அப்டேட்டுடன் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இன்று மாலை மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிள்
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது. உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். உதயநிதி தற்போது அமைச்சராகிவிட்டதால் மாமன்னன் தான் தனது கடைசிப் படம் என ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
இதனையடுத்து மாமன்னன் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் உதயநிதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து படக்குழு அப்டேட் வெளியிட்டிருந்தது. அதன்படி, மாமன்னன் முதல் பாடல் 19ம் தேதி வெளியாகும் எனவும், இதனை ஏஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு பாடியுள்ளதாகவும் அறிவித்திருந்தது.
அதன்பின்னர் மாமன்னன் முதல் பாடலில் டைட்டில் குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி, ராசா கண்ணு எனத் தொடங்கும் இந்தப் பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். முதன்முறையாக இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் வைகைப்புயல் வடிவேலு பாடியுள்ள இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை இயக்குநர் மாரி செல்வராஜ், ஏஆர் ரஹ்மான், உதயநிதி ஆகியோர் அடுத்தடுத்து வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை முதலே மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்த அப்டேட் கொடுத்துள்ளார். இதுகுறித்து டிவிட் செய்துள்ள மாரி செல்வராஜ், மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று (மே 19) மாலை வெளியாகும் என அறிவித்துள்ளார். "பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்" என்ற கேப்ஷனுடன் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டரில் வடிவேலுவும் உதயநிதியும் ஒன்றாக அமர்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னணியில் இருக்கும் சுவரோவியம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கர்ணன் படத்திலும் சுவர் ஓவியத்தை குறியீடாக பயன்படுத்தி இருந்தார் மாரி செல்வராஜ். அதனால், மாமன்னன் படத்திலும் தரமான சம்பவங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இன்று மாலை வெளியாகும் மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிளை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











