Maamannan: வசூலில் அதகளம் செய்த மாமன்னன்... மாரி செல்வராஜுக்கு ஃபாரின் கார் பரிசளித்த உதயநிதி
சென்னை: உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் மாமன்னன்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடந்த 29ம் தேதி வெளியான மாமன்னன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாசிட்டிவான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டி வருகிறது மாமன்னன்.
இந்நிலையில், மாமன்னன் படத்தின் வெற்றியை பாராட்டி மாரி செல்வராஜ்ஜுக்கு கார் பரிசளித்துள்ளார் உதயநிதி.

மாரி செல்வராஜ்ஜுக்கு கார் பரிசளித்த உதயநிதி: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் கடந்த 29ம் தேதி வெளியானது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியான மாமன்னன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பாசிட்டிவான விமர்சனம், தரமான ஓபனிங் என பாக்ஸ் ஆபிஸிலும் ரியலாக சம்பவம் செய்து வருகிறது.
உதயநிதி நடித்த படங்களிலேயே மாமன்னன் தான் பாக்ஸ் ஆபிஸில் முதல் வாரமே அதிகம் கலெக்ஷன் செய்துள்ளதாம். அதுமட்டும் இல்லாமல் இந்த வாரம் மாமன்னன் படம் மட்டுமே வெளியானதால் ரசிகர்களுக்கு ஒரே சாய்ஸ் தான் என சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் வடிவேலுவின் வித்தியாசமான கேரக்டர், உதயநிதியின் கடைசிப் படம் எனவும் மாமன்னனுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மாமன்னன் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் உதயநிதி ரொம்பவே மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க முடிகிறது. அமைச்சராக ஸ்கோர் செய்து வரும் உதயநிதி, தனது கடைசி படத்தில் சமூகநீதி அரசியல் பேசி மாஸ் காட்டியுள்ளார். இதில் அவருக்கு அரசியல் ஆதாயம் இருந்தாலும், வெகுஜன ரசிகர்களிடம் அவருக்கு நல்ல ரீச் இருப்பதாக சொல்லப்படுகிறது.

விமர்சன ரீதியாகவும், வசூல் அளவிலும் மாமன்னன் வெற்றிப் படமாக அமைந்துவிட்டதால், இயக்குநர் மாரி செல்வராஜ்ஜுக்கு சூப்பரான கிஃப்ட் கொடுத்துள்ளார் உதயநிதி. அதாவது சுமார் 50 லட்சம் மதிப்புடைய மினி கூப்பர் காரை இயக்குநர் மாரி செல்வராஜ்ஜுக்கு பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார். இதனை டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ்ஜுக்கு தனது அன்பையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
அதில், "ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "மாமன்னன் வணிகரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. ரெட் ஜெயன்ட் நிறுவனம் மாரி செல்வராஜ் சாருக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க 'மாமன்னன்'-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி" என உதயநிதி ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார். இதனையடுத்து இந்த டிவிட்டர் பதிவுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ்ஜும் க்யூட்டாக ரியாக்ட் செய்துள்ளார்.

உதயநிதியின் டிவிட்டர் பதிவை ரீ-ட்விட் செய்துள்ள மாரி செல்வராஜ், "மாமன்னன் கதை எந்த புள்ளியில் தொடங்கியதோ சரியாக அந்த புள்ளியில் நின்று ஒட்டுமொத்த மானுட சமூகத்தின் கரம் பற்றி பெரும் நெகழ்ச்சியோடு சொல்கிறேன். அத்தனைக்கும் நன்றியும் ப்ரியமும் உதயநிதி சார்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இருவரின் டிவிட்டர் பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இதனையடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ்ஜுக்கு பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக நேற்று மாமன்னன் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர். இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதி, கீர்த்தி சுரேஷ் மூவரும் ஏஆர் ரஹ்மான் வீட்டிற்கே சென்று மாமன்னன் வெற்றியை கொண்டாடினர். அப்போது ஏஆர் ரஹ்மான் கேக் வெட்டி மாமன்னன் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











