மாமன்னன் படத்திற்காக விக்ரம், தனுஷிடம் பெர்மிஷன் கேட்ட உதயநிதி... இருவரும் சொன்ன ஒரே பதில்!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள மாமன்னன் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.
உதயநிதியின் கடைசிப் படமாக உருவாகியுள்ள மாமன்னன் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படம் உருவானது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் ஒரு பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில், மாமன்னன் படத்திற்காக விக்ரம், தனுஷ் ஆகியோரிடம் உதயநிதி பெர்மிஷன் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
விக்ரம், தனுஷிடம் பெர்மிஷன் கேட்ட உதயநிதி:மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, ஃபஹத் பாசில், லால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். உதயநிதியின் கடைசிப் படமாக உருவாகியுள்ள மாமன்னன் ஜூன் மாதம் வெளியாகிறது. ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள மாமன்னன் எதிர்பாராத ஒரு சூழலில் உருவானதாக மாரி செல்வராஜ் கூறியுள்ளார். மாமன்னன் படம் உருவானது குறித்து பிரபல யூடியூப் தளத்துக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ். அதில், அவர் மாமன்னன் படம் குறித்து பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார். பரியேறும் பெருமாள் படம் வெளியானதுமே உதயநிதி தன்னிடம் போனில் வாழ்த்துத் தெரிவித்து இருந்தார்.
அப்போதே இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என பேசியிருந்தோம். அதன்பின்னர் கர்ணன் படம் வெளியானதும் நான் உடனடியாக துருவ் விக்ரம் படத்தை இயக்க ரெடியாகிவிட்டேன். அந்தப் படத்தின் ஷூட்டிங் கூட தொடங்கிவிட்டது. அந்நேரம் திடீரென தன்னை அழைத்த உதயநிதி, சினிமாவில் இருந்து விலகலாம்ன்னு முடிவு எடுத்துட்டேன். அதனால கடைசியா ஒரு படம் நடிக்கலாம்ன்னு இருக்கேன், அத நீங்க டைரக்ட் பண்ணா நல்லா இருக்கும்... முடியுமான்னு கேட்டார்.
இதனையடுத்து உடனடியாக உதயநிதியை நேரில் சந்தித்துள்ளார் மாரி செல்வராஜ். அப்போது துருவ் விக்ரம் படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும், அடுத்து தனுஷ் உடன் ஒரு படத்தில் கமிட்டாகிவிட்டதாகவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் இப்போதைக்கு உங்களுக்கான கதை தன்னிடம் இல்லை, ஆனால், எனது கனவு படத்திற்கான கதை ஒன்று ரெடியாக இருப்பதாக மாமன்னன் கதையை கூறியுள்ளார்.
மாமன்னன் கதைக்கு ஓக்கே சொன்ன உதயநிதி, உடனே இந்தப் படத்தைத் தொடங்கலாம் என மாரி செல்வராஜுக்கு கால்ஷீட்டும் கொடுத்துவிட்டாராம். ஆனால், துருவ் விக்ரம், தனுஷ் படங்களை என்ன செய்வது எனக் கேட்க, அவர்களிடம் நானே பேசுகிறேன் என்றுள்ளார் உதயநிதி. உடனே விக்ரமிற்கு கால் பண்ண உதயநிதி, கடைசியாக ஒரு படம் பண்ணலாம்ன்னு இருக்கேன், அதுவும் மாரி செல்வராஜ் உடன். அதனால் துருவ் விக்ரம் படத்தை தள்ளிவைத்துக் கொள்ளலாமா எனக் கேட்டுள்ளார்.
அதேபோல், தனுஷிடமும் இதே காரணத்தை கூறி பெர்மிஷன் கேட்டுள்ளார் உதயநிதி. கடைசிப் படத்துக்காக பெர்மிஷன் கேட்ட உதயநிதியிடம் விக்ரம், தனுஷ் என இருவருமே சொல்லிவைத்தது போல ஓக்கே கூறிவிட்டார்களாம். இந்தப் படம் உதயநிதிக்கு மட்டும் இல்லாமல் மாரி செல்வராஜ்க்கும் முக்கியமானது என்பதால், அவர்கள் எதையும் யோசிக்கவில்லையாம். அதன்பின்னரே மாமன்னன் படத்தின் வேலைகளைத் தொடங்கினாராம் மாரி செல்வராஜ்.
அதேநேரம் மாமன்னன் படப்பிடிப்பை முடித்துவிட்ட மாரி செல்வராஜ், தற்போது வாழை என்ற படத்தை இயக்கி வருகிறார். இது முடிந்ததுமே உடனடியாக துருவ் விக்ரம் படத்தையும் தனுஷின் படத்தையும் இயக்கவுள்ளாராம் மாரி செல்வராஜ். தனது கடைசிப் படத்தை மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உதயநிதி ஏன் ஆசைப்பட்டார் என்பதை மாமன்னன் வெளியானதும் தெரிந்துவிடும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். முன்னதாக இந்தப் படத்தில் இருந்து ஏஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய ராசா கண்ணு பாடல் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











