Maamannan: மீண்டும் இணையும் மாமன்னன் கூட்டணி... மாரி செல்வராஜ்ஜிடம் சரண்டரான வடிவேலு!
சென்னை: மாரி செல்வராஜ், வடிவேலு, உதயநிதி கூட்டணியில் வெளியான மாமன்னன் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றுள்ளது.
ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
நீண்ட நாட்களாக வீட்டிலேயே முடங்கியிருந்த வடிவேலுவுக்கு மாமன்னன் தரமான கம்பேக் படமாக அமைந்தது.
சீரியஸ்ஸான கேரக்டரில் நடித்து ரசிகர்களை மிரட்டிய வடிவேலு, மீண்டும் மாரி செல்வராஜ்ஜுடன் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் இணையும் மாமன்னன் கூட்டணி
ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பில் இருந்த மாமன்னன் கடந்த மாதம் இறுதியில் வெளியானது. முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் குறித்து மாரி செல்வராஜ் பேசியிருந்தது சர்ச்சையானது. இதனால் மாமன்னன் படத்துக்கு நெகட்டிவான ப்ரொமோஷன் கிடைத்தது. ஆனாலும் படம் வெளியான பிறகு வசூலில் மாஸ் காட்டியது.
உதயநிதி கேரியரில் அதிகம் வசூலித்த படமாக மாமன்னன் சொல்லப்படுகிறது. மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஆகியோர் லீட் கேரக்டரில் நடித்திருந்தனர். இன்னொருபக்கம் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், பாடல்களிலும் பின்னணி இசையிலும் மிரட்டியிருந்தார். சமூக நீதி பேசும் பொலிட்டிக்கல் ஜானர் படமான மாமன்னன், வடிவேலு கேரியரில் முக்கியமானதாக அமைந்துள்ளது.
மாமன்னன் என்ற டைட்டில் ரோலில் வடிவேலு நடித்துள்ளார். ஆரம்பம் முதலே காமெடியான கேரக்டரில் மட்டுமே நடித்து வந்த வடிவேலு, முதன்முறையாக சீரியஸ்ஸான ரோலில் நடித்துள்ளார். சாதாரண கட்சித் தொண்டனாக இருந்து எம்எல்ஏவாக மாறும் வடிவேலு, சாதியத்தின் பெயரால் அவமதிக்கப்படும் இடங்களில் தனது முதிர்ச்சியான நடிப்பால் பலரையும் கலங்கடித்திருந்தார்.

இன்னொரு பக்கம் இப்படத்தில் இடம்பெற்ற 'ராசாக் கண்ணு' பாடலை ஏஆர் ரஹ்மான் இசையில் பாடியிருந்தார். காமெடி மட்டுமல்ல எப்படிப்பட்ட கேரக்டர் என்றாலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருந்தார். ரெட் கார்டு பஞ்சாயத்தால் வீட்டில் முடங்கியிருந்த வடிவேலுவுக்கு மாமன்னன் நல்ல கம்பேக் படமாக அமைந்தது.
இதனிடையே மாமன்னன் ப்ரொமோஷன் பேட்டிகளில் மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் பண்ண வேண்டும் என தனது விருப்பத்தை கூறியிருந்தார். தற்போது அது கன்ஃபார்ம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மாமன்னனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை திரைப்படம் வெளியாகவுள்ளது. இது வெளியானதும் துருவ் விக்ரம், தனுஷ் ஆகியோரின் படங்களை இயக்கவுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக மீண்டும் வைகைப்புயல் வடிவேலுவுடன் இணையவுள்ளாராம் மாரி செல்வராஜ். இந்தப் படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்கிறாரா அல்லது, தனுஷ், துருவ் விக்ரம் ஆகியோரின் படங்களில் லீட் ரோலில் நடிப்பாரா என்பது இன்னும் தெரியவில்லை. அதேநேரம் மாமன்னன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் மாரி செல்வராஜ் - வடிவேலு இணைவது உறுதி என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











