“மாநாடு 100வது நாள்“.. தயங்கி நிற்கும்போதெல்லாம் "துணிந்து இறங்கு".. நன்றி தெரிவித்த சுரேஷ்காமாட்சி!
சென்னை : சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் 100 நாட்கள் ஆனதையொட்டி தயாரிப்பாளர் சுரேஷ்கமாட்சி நன்றி கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நவம்பர் மாதம் 25ந் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது
வித்தியாசமான டைம்லூப் முறையில் முதன் முதலில் தமிழ் திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய வெங்கட்பிரபுவை அனைவரும் பாராட்டினர். விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்தது. நடிகர் சிம்புவிற்கு கம்பேக் கொடுத்த படமாகவும் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

மாநாடு 100வது நாள்
இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு 100 நாளாவதையொட்டி தயாரிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எண்ணித் துணிக கருமம் என்ற வள்ளுவன் நமக்கு எப்போதுமே சிறந்த மோட்டிவேட்டர். தயங்கி நிற்கும்போதெல்லாம் "துணிந்து இறங்கு" எனத் தட்டிக் கொடுப்பவர்.

"மாநாடு" தரமான வெற்றி
துணிந்து இறங்கி செய்த படம் "மாநாடு" . இன்று தன்னம்பிக்கையின் உச்சமாய் நூறாவது நாளைத் தொட்டிருக்கிறது. சமீபகாலமாக 100வது நாள் கடலில் போட்ட பெருங்காயமாய் கரைந்தே போய்விட்டது. ஆனால், நான்கு நாட்களில் திரையரங்கிலிருந்து படத்தை துரத்திவிடும் இந்நாட்களில் "மாநாடு" தரமான வெற்றியை, மகிழ்ச்சியை தமிழ் சினிமாவோடு பகிர்ந்திருக்கிறது.

அனைவருக்கும் மனமார்ந்த நன்றி
இசை இளவல் யுவன் ஷங்கர் ராஜா ஒரு ராஜாங்கமே செய்துவிட்டார். அவருக்கு என் நன்றிகள். அசாத்திய தொழில் நுட்பங்களோடு அசத்திய ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், "எடிட்டிங் கிங்" கே எல் பிரவீண், சண்டைப்பயிற்சியாளர் சில்வா, கலை இயக்குநர் உமேஷ் ஜே குமார், ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர், விளம்பர வடிவமைப்பு ட்யுனி ஜான் ஆகியோர் மாநாடு படத்தின் பலமாக நின்றார்கள். அவர்களுக்கு என் மனதார்ந்த நன்றிகள்.

எஸ்.ஜே சூர்யாவின் மேஜிக்
இந்தப் படத்தில் வேலை செய்த உதவி இயக்குநர்கள், தயாரிப்பு நிர்வாகி சுப்பு என்ற சுப்பிரமணியனுக்கும், மற்ற தயாரிப்பு மேலாளர்கள், லைட் மேன்கள், சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட அத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றிகள். எனது மிகப் பெரிய பலமாக நின்ற பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் தனித்தனியாக என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் கொண்டு சேர்த்த படம் இது. உடன் நிற்கும் நண்பர்களாக என்றும் இருங்கள். மிக்க நன்றி. மாநாடு படத்தின் வெற்றியை மேஜிக்காக மாற்றிய எஸ்.ஜே சூர்யாவுக்கு என் மானசீக நன்றிகள். என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











