நைட் 10 மணியிலிருந்து 11.30 மணிவரை.. ரோபோ சங்கர் பற்றி மாதம்பட்டி ரங்கராஜ் உருகிருக்காரு
சென்னை: பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரான ரோபோ சங்கர் உடல்நல குறைவால் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். திடீரென அவர் உயிரிழந்தது அனைவரையும் உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியது. கமல்ஹாசன் உள்ளிட்டோர் எல்லாம் நேரில் வந்து தங்களது இறுதி அஞ்சலியை அவருக்கு செலுத்தினார்கள். இந்நிலையில் சங்கர் பற்றி பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் பேசிய வீடியோ திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.
சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்து பிறகு தனுஷ் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தவர் ரோபோ சங்கர். தான் நடித்த முதல் படமான மாரியில் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த சனிக்கிழமை என்ற கேரக்டரை அவ்வளவு எதார்த்தமாகவும் சிறப்பாகவும் செய்திருந்தார். அதனைப் பார்த்த பலரும் கண்டிப்பாக பெரிய திரையில் சங்கருக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது என்று கணித்தார்கள். அதன்படிதான் அவரது கிராஃபும் இருந்தது.
பிஸியான நடிகர்: வாயை மூடி பேசவும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, விஸ்வாசம் என வரிசையாக நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். தனது வசனங்களில் அட்டகாசமான கவுண்ட்டர்களை கொடுத்து கலக்கிய அவர்; சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தன்னை வளர்த்துவிட்ட சின்னத்திரையை கடைசிவரை மறக்கவில்லை. சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டிருந்தார்.

உடல்நலம் தேறிய ரோபோ: அவரது கரியர் படு பீக்கில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அதிகப்படியான மது பழக்கம் அவரை நோயில் தள்ளியது. உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்று முழு குணமடைந்துவந்தார். குணமடைந்து வந்த கையோடு அடுத்தடுத்து கதைகளை கேட்டு படங்களில் பிஸியாகிவிட்டார். இப்படிப்பட்ட சூழலில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது.
என்ன ஆனது?: ஒரு படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருந்தபோது அவர் ரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பதறிய படக்குழு உடனே போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதித்தது. எப்படியாவது சிகிச்சை பெற்று மீண்டுவந்துவிடுவார் என்றுதான் அனைவருமே நினைத்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி சில மாதங்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
நேரில் வந்த கமல்: சங்கரின் உயிரிழப்பை கேள்விப்பட்டதும் திரைத்துறையை சேர்ந்த பலரும் நேரில் சென்று தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள். தனது குருநாதர் பாலசந்தர் இறப்புக்குக்கூட வராத கமல்ஹாசன்; ரோபோவின் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றார். கமலின் தீவிர ரசிகர் ரோபோ சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் பற்றி பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் பேசியிருக்கும் வீடியோ திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.
ட்ரெண்டாகும் பேச்சு: விழா ஒன்றில் சில மாதங்களுக்கு முன்பு சங்கரும், ரங்கராஜும் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய ரங்கராஜ், 'மெஹந்தி சர்க்கஸ் படம் பார்த்துவிட்டு இரவு 10 மணி இருக்கும். ரோபோ சங்கர் அண்ணன் எனக்கு ஃபோன் செய்து கிட்டத்தட்ட 11.30 மணிவரை பேசிக்கொண்டிருந்தார். அதை என்னால் மறக்கவே முடியாது. நன்றி அண்ணா" என்று சொன்னார். அதே விழாவில் பேசிய சங்கர், 'மெஹந்தி சர்க்கஸ் படத்தை தொடர்ச்சியாக நான்கு முறை பார்த்தேன். பிறகு ரங்கராஜை தொடர்புகொண்டு ஒவ்வொரு சீன் பற்றியும் விளக்கமாக பேசினேன்' என குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











