மதன் தலைமறைவு விவகாரம்... கைதாவாரா பாரிவேந்தர்?
சென்னை: வேந்தர் மூவீஸ் மதன் தலைமறைவு விவகாரத்தை, கொலையாக இருக்குமோ என்ற கோணத்திலும் போலீஸ் பார்ப்பதால் எஸ்ஆர்எம் குழும தலைவரான பாரிவேந்தர் என்ற பச்சமுத்து மீது வழக்குப் பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேந்தர் மூவிஸ் நிறுவன அதிபர் எஸ்.மதன், காணாமல் போனதாகச் சொல்லப்பட்டு 6 நாட்கள் கடந்துவிட்டது. உண்மையில் அவர் 6 நாட்களுக்கு முன்புதான் காணாமல் போனாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுவரை அவர் எங்கிருக்கிறார்.. குறைந்தபட்சம் எங்கே தங்கியிருந்தார் என்ற தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவர் உயிருடன்தான் உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் உறவினர்கள் குழப்பத்திலும் தவிப்பிலும் இருக்கிறார்கள்.
இதனிடையே இந்த வழக்கில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக துணை வேந்தர் மீது புகார் கூறப்படுவதால், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம் மதன் தலைமறைவு மட்டுமல்ல, மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகை எஸ்ஆர்எம் நிர்வாகத்திடமே உள்ளதாக மதனின் தாயார் கூறியுள்ளார். மேலும் மதன் தலைமறைவுக்குக் காரணமே பாரிவேந்தர் - அவர் மகன் ரவி - மதனுக்கு இடையிலான பிணக்கு காரணமாகத்தான் என்பதால் பாரிவேந்தரிடம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
எனவே அவரை கைது செய்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











