தமிழர்களையும் தமிழீழப் போராட்டத்தையும் படுகேவலமாகச் சித்தரிக்கும் மெட்ராஸ் கபே!
சென்னை: மெட்ராஸ் கபே படத்தை தமிழகத்தில் மட்டுமல்ல, உலகில் எங்குமே திரையிடக் கூடாது என்று தமிழ் கட்சிகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் குரல் எழுப்புவதில் நூறு சதவீதம் நியாயமிருக்கிறது எனச் சொல்ல வைக்கிறது அந்தப் படத்தின் கதை.
தமிழர்களின் இயல்பை, தமிழ் ஈழப் போராட்டத்தை, அதை 30 ஆண்டு காலம் நடத்திய விடுதலைப் புலிகளை, உலகமே அதிசயித்த மாவீரனான பிரபாகரனை மிகக் கேவலமாகவே சித்தரித்துள்ளது இந்தப் படம்.
எதிர்ப்பாளர்களுக்காக சென்னையில் சமீபத்தில் இந்தப் படத்தைப் போட்டுக் காட்டினார்கள். உடன் ஜான் ஆபிரகாமும் இருந்தார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், ஆர்கே செல்வமணி உள்பட பலரும் படத்தைப் பார்த்தனர். பத்திரிகையாளர்கள் சிலரும் இந்தக் காட்சியைப் பார்த்தனர்.

காங்கிரஸ் கட்சியின் பிரச்சார படம்
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார முன்னுரை மாதிரிதான் படமே தொடங்கிறது.
நாம் ஏன் நமது பிரதமரை இழந்தோம் (ராஜீவ் காந்தி) என்றுதான் முதல் காட்சியே ஆரம்பிக்கிறது. குண்டு வெடிப்பில் பலியான போது ராஜீவ் பிரதமரே இல்லை என்ற உண்மையைக் கூட மறைத்துவிட்டு, இப்படியொரு கேள்வியை எழுப்பும்போதே இந்தப் படத்தின் நோக்கம் பளிச்சென்று புரிகிறதல்லவா?

பிரபாகரனை அவமதிக்கும் காட்சிகள்
இந்தப் படத்தில் பாஸ்கரன் என்ற கேரக்டரை வைத்திருக்கிறார்கள். பிரபாகரனை இழிவுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு அஜய் ரத்தினத்தை வைத்து உரலை இடித்திருக்கிறார்கள்.
மிகமிக மட்டமான பாத்திரப் படைப்பு அது. எதிரிகள் கூட மரியாதை செலுத்தும் ஒரு போராளியை, பெண்கள் - குழந்தைகளைக் கொல்லும் ஒரு வன்முறைக் கூட்டத்தின் தலைவனைப் போல சித்தரித்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழீழப் போரின் உண்மைகள் தெரியாத ஒருவன் அதைப் பற்றி படமெடுக்கவில்லை என யார் அழுதார்கள்?

ஒப்பற்ற தலைவராக ராஜீவ்
இந்தியாவின் ஒப்பற்ற தலைவன், ஈழ மக்களின் காவலனான ராஜீவ் காந்தி, இந்திய - இலங்கை ஒப்பந்த்தில் கையெழுத்திட்டு அமைதியை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், போரை மட்டுமே விரும்பும் பாஸ்கரன் அதைக் குலைத்து, ராஜீவ் காந்தியைக் கொல்வதாகவும் இந்தக் கதையை அமைத்திருக்கிறார்கள். புலிகளின் ஒற்றுமையைக் குலைக்கச் செல்லும் ரா அதிகாரியாக ஜான் ஆபிரகாம் வருகிறார்.
வரலாற்றில் எந்த இடைச் செருகலையும் யாரும் செய்ய முடியாது. ஈழப் போரின் அதுவும் சமகால வரலாற்றை அறிந்தவர்களுக்கு இந்தப் படம் எத்தனை பெரிய மோசடி என்பது எளிதில் புரியும்.

ஐபிகேஎப் செய்ததை விடவா?
ஈழப் போரில் பிரதானமாக ஈடுபட்டவர்களான விடுதலைப் புலிகளும் சரி, அவர்களின் தலைவர் பிரபாகரனும் சரி, யுத்த நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றியவர்கள் என்பது உலகறிந்தது. இந்திய அமைதி காக்கும் படை (ஐபிகேஎப்) என்ற பெயரில் ராணுவத்தினர் அங்கே அரங்கேற்றிய கொடுஞ்செயல்களைப் பார்த்து, இதைவிட சிங்கள ராணுவமே மேல் என்ற தமிழர்களைச் சொல்ல வைத்த பெருமை ராஜீவுக்குத்தானே உண்டு!
பாஸ்கரன் என்பது கற்பனைப் பெயர் என்ற வசதியான பொய்யைச் சொல்லிக் கொண்டு, பிரபாகரனும் அவரது வீரர்களும் வன்முறையாளர்கள், பெண் பித்தர்கள், குடியர்கள் என்றெல்லாம் சித்தரிக்கும் காட்சிகள் இந்தப் படத்தில் உள்ளன.

கேவலமான படம்
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தாயைத் தாரமாகவோ, தங்கையை உடன் பிறந்தவனே சீரழிப்பதாகவோ வெளிவரும் புனைகதைகளை ஒப்புக் கொள்வோம் என்று கூறுவோரால் மட்டுமே மெட்ராஸ் கபே போன்ற கேவலமான படங்களைச் சகித்துக் கொள்ள முடியும்.
கூடப் பிறக்காதவளாக இருந்தாலும் சகோதரி என்று கூறிய வார்த்தைக்காகவே தொப்புள் கொடி உறவாக மதிக்கும் தமிழர்களால் இது போன்ற அனாச்சாரங்களைச் சகித்துக் கொள்ள முடியாது!


Click it and Unblock the Notifications











