'மெட்ராஸ் கபே'க்கு எதிராக தமிழர்கள் போராட்டம்- இங்கிலாந்தில் படம் நிறுத்தம்
லண்டன்: மெட்ராஸ் கபே படத்துக்கு எதிராக இங்கிலாந்து வாழ் இந்திய மற்றம் இலங்கைத் தமிழர்கள் பெரும் திரளாக குவிந்து போராட்டங்களில் ஈடுபட்டதால் தியேட்டர்களில் அந்தப் படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பெரும்பாலான தியேட்டர்களில் படத்தை நிறுத்தி விட்டதாகவும், சில தியேட்டர்களில் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் படம் போடப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் படம் எங்குமே ஓடவில்லை என்று இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.
இங்கிலாந்தில் வாழும் இலங்கைத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் இணைந்து படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் குவிந்து போராட்டங்களில் குதித்ததால் தியேட்டர்களில் படம் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

வெள்ளிக்கிழமை ரிலீஸ்
வெள்ளிக்கிழமையன்று இங்கிலாந்தில் இந்தப் படம் தியேட்டர்களுக்கு வந்தது. ஆனால் படம் ரிலீஸானதுமே தமிழர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு தியேட்டர்களுக்குப் படையெடுத்தனர். அங்குகூடி அமைதி வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

படத்தை நிறுத்திய சினிவேர்ல்ட்
இதையடுத்து இங்கிலாந்தில் இந்தப் படத்தை விநியோகிக்கும் உரிமையை வாங்கியுள்ள சினிவேர்ல்ட் நிறுவனம் படத்தை திரையிடுவதை நிறுத்தி வைத்ததாக இந்த நிறுவனத்தின் இந்தியப் பங்காளரும், வயாகாம்18 மோஷன் பிக்ச்ர்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் நிர்வாகியுமான ருத்ராப் தத்தா தெரிவித்துள்ளார்.

ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை
தமிழர்கள் இங்கிலாந்தில் கணிசமான அளவில் இருப்பதால் அவர்களைப் பகைத்துக் கொள்ளவோ, ரிஸ்க் எடுக்கவோ இங்கிலாந்து தியேட்டர் நிர்வாகிகள் விரும்பவில்லையாம்.

எல்லா தியேட்டரிலும் நிறுத்தம்
மெட்ராஸ் கபே எங்கெல்லாம் திரையிடப்பட்டதோ அங்கெல்லாம் நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்காவில் ஓடுகிறது
அதேசமயம், அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இந்தப் படம் தடையில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

படத்தை நிறுத்த ஆன்லைன் புகார்
இதற்கிடையே, மெட்ராஸ் கபே படத்துக்கு எதிராக தடை கோரி ஆன்லைன் மூலம் புகார் தரும் முயற்சி இங்கிலாந்தில் தமிழர்களால் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 2000 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











