தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல்: ஆக. 5ஆம் தேதி இறுதி விசாரணை.. சென்னை ஹைகோர்ட்!
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஆகஸ்ட் ஐந்தாம்தேதி இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு, ஜூன் 23-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், சங்க உறுப்பினர்கள் பலரை நீக்கயது தொடர்பாகவும், தபால் வாக்குகள் அளிக்க மறுக்கப்பட்டது தொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்த பின்பு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது எனவும் அவர் அறிவித்தார்.
நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமித்து,மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார் .வாக்காளர் பட்டியலை சரிபார்க்க பட வேண்டும் அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிட வேண்டும். உறுப்பினர்களை சேர்த்து வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும். தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தேர்தல் நடைமுறைகளை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த நிலையில் வழக்கு நீதிபதி எம் எம் சுந்தரேஷ் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாக்குப் பெட்டிகளை திறந்து வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது நீதிபதிகள் இந்த வழக்கின் முழு விசாரணையும் நடத்தி முடித்து விடலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











