ஹர்காரா படம் மீது வழக்கு.. தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
சென்னை: ஹர்காரா திரைப்படம் 'ஓட்டத் தூதுவன் 1854' படத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்கிற வாசகத்தை படத்தில் பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஆர் சிதம்பரம், உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றி உள்ளார். இவர், நாட்டின் முதல் அஞ்சல்காரர் குறித்த "ஓட்டத் தூதுவன் 1854" என்ற கதையை எழுதி, திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.
மேலும், தனது கதையை சென்னை முகப்பேரை சேர்ந்த தயாரிப்பாளர் ராம் அருண் காஸ்ட்ரோ என்பவரிடம் கூறி, அவரையே கதாநாயகனாக வைத்து படும் எடுத்துள்ளார்.

ஓட்டத் தூதுவன் 1854: படத்திற்கு இருவரும் உரிமையாளர்கள் என 2014ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு, எடுக்கப்பட்ட இப்படம் 2016ம் ஆண்டு பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் இதுவரை இப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
உரிமையியல் வழக்கு: இந்த நிலையில் அதே கதையை வைத்து "ஹர்காரா" என்கிற படத்தை தயாரிப்பாளர் ராம் அருண் காஸ்ட்ரோ எடுத்துள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி பிடி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.வி.விஜய் பிரசாந்த் ஆஜராகி, கதை, திரைக்கதை - ஆர்.சிதம்பரம் என்று குறிப்பிடாமல் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டுமென வாதிட்டார்.
வாசகங்கள் இடம்பெற வேண்டும்: பின்னர் நீதிபதி, ஹர்காரா படத்தில் எழுத்துகள் போடும் போது ஹர்காரா படம் ஆர்.சிதம்பரம் எழுதிய ஓட்டத் தூதுவன் 1854 திரைப்படத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது, என்கிற வாசகத்தை ஆங்கிலம் மற்றும் அந்தந்த மொழிகளில் இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும், ஓடிடி தளத்தில் வெளியிடும்போதும் இந்த வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இயக்குனர் மற்றும் வசனகர்த்தாவாக சிதம்பரத்தின் பெயரை மீண்டும் சேர்க்கும் வரை படத்தை வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டார்.
மேலும்,படத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானத்தில் சிதம்பரத்திற்கு எந்த பங்கையும் வழங்க வேண்டியதில்லை என்றும் ராம் அருண் காஸ்ட்ரோவிற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.
நேற்று வெளியானது: காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ, கவுதமி, பிச்சைக்காரன்'மூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு பிலிப் ஆர்.சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தியேட்டரில் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











