Angel Movie: உதயநிதிக்கு எதிரான 'ஏஞ்சல்' பட வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சென்னை: 'ஏஞ்சல்' படப்பிடிப்புக்கு உதயநிதி ஸ்டாலின் ஒத்துழைக்கவில்லை எனவும், பேசியபடி படத்தை முடித்து கொடுக்காததால், 25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி பட தயாரிப்பாளர் ராமசரவணன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், உதயநிதி கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டதாகவும், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். மீதம் இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்த உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என தெரிவித்து விட்டார்.

எஞ்சல் படப்பிடிப்பு விவகாரம்: இதனால், ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டுமெனவும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு தனி நீதிபதி டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, காலதாமதமாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், படத்தை முடித்து கொடுக்காததால் தயாரிப்பாளருக்கு எந்த நிதி இழப்பும் ஏற்படாது. எனவே மனுவை நிராகரிக்க வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து, நீதிபதி ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
உதயநிதி பதிலளிக்க வேண்டும்: இந்த உத்தரவை எதிர்த்து. ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து. இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், மற்றும் குமரப்பன் அமர்வில் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.


Click it and Unblock the Notifications











