விமர்சனம் செய்வாங்க.. அதற்கெல்லாம் தடை விதிக்க முடியாது.. தயாரிப்பாளர்களுக்கு நீதிமன்றம் பதில்!
சென்னை: தமிழ்நாடு ஆக்டிவ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பதிலளித்துள்ளது. அதாவது தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் ஒரு படம் வெளியாகி மூன்று நாட்களுக்குப் பின்னரே அந்த படம் குறித்த விமர்சனங்களை ரசிகர்களும் விமர்சகர்களும் ஊடகங்களும் தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இப்படியான நிலையில் இந்த மனு மீதான முதற்கட்ட விசாரணையை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் ஒரு படத்தின் விமர்சனம் என்பது ரசிகர்களின் கருத்து சுதந்திரம் அதற்கெல்லாம் பொத்தாம் பொதுவாக தடை விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்த தொகுப்பில் காணலாம்.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது," ஒரு படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு பின்னர் படம் படுத்த விமர்சனங்களை தெரிவிப்பது என்பது ரசிகர்களின் அல்லது மக்களின் கருத்துச் சுதந்திரத்தை பாதிக்காது. மேலும் படத்தினை விமர்சனம் செய்கின்றேன் என்ற பெயரில் ரசிகர்கள் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் படத்தில் இயக்குனர் படத்தின் தயாரிப்பாளர் என ஒட்டுமொத்த படக்குழுவின் தனிப்பட்ட முறையில் தகாத வார்த்தைகளில் விமர்சிக்கின்றனர். இது போன்ற விஷயங்களுக்கும் நீதிமன்றம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படம் வெளியான தினத்திலேயே ரசிகர்கள் படம் குறித்து திட்டமிட்டு நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவதால், படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கிறது. இது மட்டும் இல்லாமல் ஒரு நல்ல படம் தோல்வி படமாகவும் மாற்றப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு ரெட் மனுவாக தாக்கல் செய்யப்பட்டதால் சென்னை உயர்நீதிமன்றம் இன்றே இதன் மீது விசாரணை நடத்தியது. இந்த வழக்கு நீதிபதி சௌந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
முடியாது: இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நீதிபதி சௌந்தர், விமர்சனம் என்பது பொதுமக்களின் கருத்து சுதந்திரம். எனவே விமர்சனம் செய்ய கூடாது என பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் விமர்சனங்களால் பல படங்கள் வெற்றியை எட்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.

உத்தரவு: மேலும் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், படத்தின் இயக்குனர் குறித்து அவதூறான கருத்துக்களை பேசுபவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கலாமே என மனுதாரருக்கு பதில் கேள்வி எழுப்பினார். மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக மத்திய மாநில அரசுகளும் யூடியூப் நிறுவனமும் நான்கு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
கேள்வி: தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழ்நாடு ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்கத்தினருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் முதற்கட்ட விசாரணை கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மத்திய மாநில அரசுகள் இது தொடர்பாக தெரிவிக்கவும் கருத்துக்கள் இந்த வழக்கில் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் என்பதால், அவர்களின் பதில் என்னவாக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இப்போதே எழுந்து விட்டது எனலாம்.



Click it and Unblock the Notifications











