சந்திரபாபு முதல் யோகி பாபு வரை.. சென்னை பாஷை இன்னா ஷோக்கா கீதுபா! #madrasday
தமிழ் சினிமாவில் மெட்ராஸ் பாஷையை பக்காவாக பேசுவோர் சிலர்தான்.
சென்னை: இன்று 379வது சென்னை தினம் கொண்டாடப்படும் வேளையில் மெட்ராஸ் பாஷை பேசிய நடிகர்களைப் பற்றி பார்க்கலாம்.
தமிழகத்தின் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வழக்கு மொழி உண்டு. மதுரை பாஷை, நெல்லை பாஷை, கொங்கு பாஷை இப்படி.. அப்படி சென்னையின் அடையாளமாய் திகழ்வது இந்த மெட்ராஸ் பாஷை.
தமிழ் சினிமாவின் பிரசவ அறையாக திகழும் சென்னை. அப்படிப்பட்ட சென்னையின் இந்த மெட்ராஸ் பாஷையை பல நடிகர்கள் பேசி நடித்துள்ளனர்.

ஆரம்பகாலம்
ஆரம்பகால சினிமாக்களில் புராணக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஜனரஞ்சக சினிமா எழுச்சிபெற்ற காலகட்டத்தில் நடிகர் சந்திரபாபு தமிழ் சினிமாவில் மெட்ராஸ் பாஷை பேசுவதை தனித்தன்மையாகக் கொண்டுவந்தார்.

தேங்காய் சீனிவாசன்
சபாஷ் மீனா படத்தில் இன்னாடா இது பேஜாரா போச்சு.. இன்னாடி எப்பப் பார்த்தாலும் ராங் பன்ற நீ என சந்திரபாபு அவ்வப்போது மெட்ராஸ் பாஷை பேசுவார். அதைத்தொடர்ந்து அதிகமாக மெட்ராஸ் பாஷை பேசி நடித்தார் சந்திரபாபு. ரிக்ஷாக்காரான் திரைப்படத்தில் ரிக்ஷா ஓட்டுனராக வரும் தேங்காய் சீனிவாசன், ஆரம்பத்திலிருந்து கடைசிவரை செம லோக்கலாக மெட்ராஸ் பாஷை பேசி கலக்கியிருப்பார். மெட்ராஸ் பாஷையைப் பேசுவதில் சந்திரபாபுக்கு அடுத்தபடியாக அதிகமாக பாராட்டுப் பெற்றவர் தேங்காய் சீனிவாசன்.

மெட்ராஸ் ஸ்டைல்
லூஸ் மோகன் என்றாலே மெட்ராஸ் பாஷை நியாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு மெட்ராஸ் பாஷையையும் லூஸ் மோகனையும் பிரிக்க முடியாது. ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் அரேபிய ஷேக் மாதிரி வந்து சலாம் போடும்போது ம்ம்மலிக்கும் சலாம் என அதையும் மெட்ராஸ் பாஷையிலேயே சொல்வார். இன்னா பயண்ட்டியா? நான் ஆர் தெரிமா...? என ஒருபக்கம் உடலை சாய்த்துக்கொண்டு பேசியது தனி அடையாளமானது. லூஸ் மோகனின் மெட்ராஸ் பாஷை மூலம் மற்ற மாவட்டங்களில் உள்ளவர்ளும் அதை கற்றுக்கொண்டனர்.

மெட்ராஸ் பாடல்
நடிகர்கள் மட்டுமே மெட்ராஸ் பாஷையில் கலக்க முடியும் என்பதை மனோரமா உடைத்தார் என்றே சொல்லலாம். கமல்ஹாசனின் சவால் திரைப்படத்தில் பிக்பாக்கெட் அடிக்கும் தொழில் செய்வார்கள். அதில் மெட்ராஸ் பாஷை பேசி கலக்கியிருப்பார். அதேபோல் பொம்மலாட்டம் திரைப்படத்தில் வரும் ஜாம் பஜார் ஜக்கு பாடல், மெட்ராஸ் பாஷையில் மனோரமா பாடியது இன்றைக்கும் கேட்கத் தூண்டும் பாடல். அதேபோல் டிய்யோனா டிய்யோ... எனத்துவங்கும் மெட்ராசை சுத்திப்பார்க்க போறேன் பாடலிலும் மனோராவின் பங்கு முக்கியமானது.

இன்னா நைனா
கோட் சூட் போட்டுக்கொண்டும் மெட்ராஸ் பாஷை பேசும் கலாச்சாரத்தை சினிமாவுக்கு கொண்டுவந்தவர் ஜனகராஜ். பொதுவாக வாயைக் கோணலாக வைத்துக்கொண்டு இவர் பேசும்போது அதில் மெட்ராஸ் பாஷையை கலந்து அடிப்பது பரோட்டாவும் சேர்வாவும் சேர்த்து குழப்பிவிட்டு ஒரு ஆப்பாயிலை உடைக்காமல் விழுங்கி அதை ஆப் செய்வதுபோல முழுமையாக இருக்கும்.

பார்த்திபன்
கமல் மெட்ராஸ் பாஷை பேசி பல படங்களில் நடித்திருந்தாலும், பம்மல் கே சம்மந்தம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்கள் அக்மார்க் முத்திரைகளாக தெரிகின்றன. தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது... என்பது, பூட்டகேசு என பிரகாஷ் ராஜிடம் பேசுவது என இரண்டு படங்களிலுமே மெட்ராஸ் பாஷையில் கமல் மெர்சல் செய்திருப்பார். அதேபோல் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த புதியபாதை திரைப்படத்தில் மெட்ராஸ் பாஷை பேசி நடித்திருப்பார்.

நகைச்சுவை
கதாநாயகர்களும், நகைச்சுவை நடிகர்களுமே மெட்ராஸ் பாஷை பேசுவார்கள் என்பதைத் தாண்டி, கோரமாக முகத்தைக் காட்டி தூள் படத்தில் பசுபதி மெட்ராஸ் பாஷை பேசியது அவரை ஓரு சென்னைவாசியாகவே அடையாளப்படுத்தியது. பொல்லாதவன் கிஷோர், தீனா என பல வில்லன் நடிகர்கள் மெட்ராஸ் பாஷையைத் தாங்கிப்பிடித்து வருகின்றனர். சமீப காலங்களில் சந்தானம், யோகிபாபு போன்றவர்கள் அதிகமாக மெட்ராஸ் பாஷையை தன்னுடைய நகைச்சுவைகளில் பயன்படுத்துகின்றனர்.

வெற்றிமாறன்
சென்னைக்கு ஒரே முகம் என்ற பிம்பத்தை உடைத்து வட சென்னை வாசிகளுக்கென வாழ்வியல் முறையிலும், பேச்சிலும் தனி அடையாளம் உண்டு (உணமையில் அதுதான் ஒரிஜினல் சென்னை) என்பதை அடையாளப்படுத்திக் காட்டும் முயற்சியை வெற்றிமாறன் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் எடுத்தார். அந்த முயற்சியின் தொடர்ச்சியாக வடசென்னை மக்களின் எளிய வாழ்வியகை அட்டகத்தி, மெட்ராஸ் படங்களில் ரஞ்சித் காட்சிப்படுத்தினார். இப்போது வடசென்னையைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் அரசியலை இன்னும் தெளிவாக பேசும் படங்கள் வரத்தொடங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications











