Kovai Guna: இளநீரைப் போன்று தூய்மையான அன்புக்கு சொந்தக்காரர் - மதுரை முத்து இரங்கல்
Kovai Guna Death News (கோவை குணா மரணம்) in Tamil: மிமிக்ரி கலைஞர் கோவை குணா மரணத்திற்கு மதுரை முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். அப்படித்தான் சந்தானம், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் சினிமாவுக்குள் நுழைந்தனர். அந்தவகையில் சினிமாவில் நுழையாவிட்டாலும் சின்னத்திரையில் இருந்துகொண்டே மக்களை கவர்ந்த கலைஞர்தான் கோவை குணா.

கோவை குணா பெரும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்
தற்போது மிமிக்ரி கலைஞர்கள் பெருகியிருக்கிறார்கள். அவர்களுக்கான முன்னோடிகளில் ஒருவர்தான் கோவை குணா. அடுத்தவரின் குரலை மட்டும் தன்னிலிருந்து வெளிப்படுத்தாமல் அவர்களின் உடல்மொழியையும் அச்சு அசலாக வெளிக்கொண்டுவரும் வெகு சில திறமைசாலிகளில் ஒருவர் குணா. கலக்கப்போவது யாரு சீஸன் 1ன் டைட்டில் வின்னராகவும் ஜொலித்தார். அதேபோல் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.

உடலநலக்குறைவால் அவதிப்பட்ட கோவை குணா
கோவை குணா கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையை மருத்துவர்கள் அளித்துவந்தனர். மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையால் அவர் நிச்சயம் உடல்நலம் தேறிவிடுவார் என்ற நம்பிக்கையில் அவரது குடும்பத்தினர் இருந்தனர்.

நேற்று உய்ரிழந்தார் கோவை குணா
ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கோவை குணா உயிரிழந்தார்.அவரது உடலானது இன்று தகனம் செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி மிமிக்ரி கலைஞரும் நடிகருமான மயில்சாமி உயிரிழந்தார். இப்போது மிமிக்ரி கலைஞரான கோவை குணாவும் உயிரிழந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை குணா உயிரிழப்புக்கு மதுரை முத்து இரங்கல்
இந்நிலையில் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனும், கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் நடுவருமான மதுரை முத்து கோவை குணா மரணத்திற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "20 ஆண்டுகளில் எத்தனையோ கலைஞர்களை பார்த்துவிட்டேன் நீங்கள்தான் நம்பர் ஒன். இன்னும் எத்தனை பல குரல் கலைஞர்கள் வந்தாலும் கோவை குணாவிற்கு நிகராகாது:

இளநீர் போன்ற தூய்மையான அன்புக்காரர்
இவரும் நானும் கலக்கப்போவது யாரு பாகம் ஒன்றில் வெற்றியாளராக வந்தாலும். எல்லா கலைஞர்களையும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். என் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர் . உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது.இளநீரைப் போன்று தூய்மையான அன்பிற்கு உகந்த மனிதர் உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்" என பதிவிட்டுள்ளார். மதுரை முத்துவும், கோவை குணாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை குணாவின் இறுதி சடங்கில் மதுரை முத்து நேரில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











