காதில் அறைந்தார்..செவிதிறன் பாதிப்பு.. விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் வழக்கு..!
சென்னை : நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகா காந்தி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
விஜய் சேதுபதியை தாக்கிய நபரே, அவர் மீது வழக்கு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாக்கப்பட்டார்
சில நாட்களுக்கு முன்பு, படபிடிப்புக்காக விஜய் சேதுபதி பெங்களுர் சென்ற போது விமான நிலையத்தில் மகா காந்தி என்பவர் அவரை தாக்கினார். விஜய்சேதுபதியை அவர் தாக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. விஜய் சேதுபதி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மகா காந்தியிடம் போலீசார் தீலிர விசாரணை நடத்தினர்.

அவதூறு வழக்கு
இந்த நிலையில், விஜய் சேதுபதியை தாக்கிய மகா காந்தி என்ற நபர் தற்போது, விஜய் சேதுபதி மற்றும் அவரது உதவியாளர் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

வாழ்த்தினேன்
அதில், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்ததாகவும், திரைத்துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தாக்கினார்
ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன் மீது, அவரது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கியதாகவும், காதில் அறைந்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

செவித்திறன் பாதிக்கப்பட்டது
இதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

உண்மைக்கு புறம்பான செய்தி
எனவே திரைத்துறையில் இருக்கின்ற சக நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கி, அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Click it and Unblock the Notifications











