’மகாபாரத’ பீமன்.. ’மைக்கேல் மதன காமராஜன்’ பீம் பாய்.. நடிகர் பிரவீன் குமார் சோப்தி காலமானார்
சென்னை: பி.ஆர். சோப்ராவின் மகாபாரத தொடரில் பீமராக நடித்து இந்திய ரசிகர்கள் மனங்களை கவர்ந்த பழம்பெரும் நடிகர் பிரவீன் குமார் சோப்தி காலமானார். அவருக்கு வயது 74.
நாடு முழுவதும் நேற்று பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவால் சோகமடைந்த நிலையில், நேற்று இரவு ரசிகர்களின் ஃபேவரைட் நடிகரான பிரவீன் குமார் சோப்தி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பீம் பாய் கதாபாத்திரத்திலும் இவர் நடித்ததையும் ரசிகர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

பிரவீன் குமார் சோப்தி காலமானார்
நடிகரும் அர்ஜுனா விருது வென்ற விளையாட்டு வீரருமான பிரவீன் குமார் சோப்தி மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 74. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

மகாபாரத பீமன்
பி.ஆர். சோப்ராவின் மகாபாரத சீரியலில் பீமனாக நடித்த பிரவீன் குமார் சோப்தி சர்வதேச அளவில் புகழ் அடைந்தார். அந்த தொடருக்கு பிறகு ஏகப்பட்ட திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதற்கு முன்னதாக பெரும்பாலும் ஹீரோவிடம் அடிவாங்கும் அடியாளாகவே நடித்து இருப்பார்.

பீம் பாய் பீம் பாய்
இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் கிரேசி மோகன் எழுத்தில் உருவான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பாடிகார்ட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். "பீம் பாய் பீம் பாய்.. அந்த லக்கரில் இருக்கும் பணத்தை எடுத்து அவிநாசி நாய் மூஞ்சியில வீசி எறி" வசனம் மிகவும் பிரபலமானது. கமல் சொன்னவுடன் மாடி ஜன்னலில் இருந்து கீழே குதிக்கும் உண்மையான பாடிகார்ட்டாகவும் நடித்து அசத்தி இருப்பார்.

ராட்சத தோற்றம்
1947ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி பிறந்த பிரவீன் குமார் சோப்தி ஹைட் சார்.. வெயிட் சார் என ராட்சத தோற்றத்தில் இருந்த நிலையில், ஜித்தேந்திரா நடிப்பில் வெளியான ரக்ஷா படத்தின் மூலம் அறிமுகமானார். ஜேம்ஸ் பாண்ட் படமான தி ஸ்பை வூ லவ்ட் மீ படத்தின் ஜாஸ் கதாபாத்திரத்தை நினைவு படுத்தும் வகையில் அவரது கதாபாத்திரம் அமைந்திருக்கும். ஏகப்பட்ட அமிதாப் பச்சன் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

அரசியல்வாதி
பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸில் தனது இளமைக்கால வாழ்க்கையை ஆரம்பித்த இவர் வட்டு எறிதல் வீரராக விளையாட்டுத் துறையிலும் அசத்தினார். சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான இவர், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். 2013ம் ஆண்டு வாசிர்ப்பூர் தொகுதியில் தோற்ற இவர் பின்னர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பிரபலங்கள் இரங்கல்
பழம்பெரும் நடிகர் பிரவீன் குமார் சோப்தி மறைவை அறிந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதே போல மகாபாரத தொடர் மூலம் அவருக்கு ரசிகரான பலரும் பிரவீன் குமார் சோப்தியின் மறைவை அறிந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் நடித்த படங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











