Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவுடன் கைகோர்த்து களமிறங்கும் இயக்குநர் மகேந்திரன்!
சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவுடன் கை கோர்த்து களமிறங்குகிறார் இயக்குநர் மகேந்திரன்.
மகேந்திரனும் இளையராஜாவும் இணைந்த படங்கள் தமிழ் சினிமாவின் குறிஞ்சி மலர்கள். கதை, இசை, நடிப்பு என அனைத்திலும் க்ளாஸிக் எனும்படி மெச்சத்தக்கதாய் வந்த படங்கள் அவை.
முள்ளும் மலரும்
இருவரும் முதலில் இணைந்த படம் ரஜினி - ஷோபா நடித்த முள்ளும் மலரும். அந்தப் படம் இன்றும் தமிழ் சினிமா படம் எடுக்க வரும் அத்தனைப் பேருக்கும் ஒரு பாடமாய் திகழ்கிறது.
உதிரிப் பூக்கள்
ஒரு நல்ல சிறுகதையை அழகிய காவியமாக்கியவர் மகேந்திரன். அதற்கு துணைநின்றது இளையராஜா இசை. அதுதான் உதிரிப்பூக்கள். இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் இந்தப் படத்துக்கு நிகரான காவியத்தை தமிழ் சினிமாவில் பார்க்க முடியுமா.. தெரியவில்லை.
ஜானி
ரஜினி இரு வேடங்களில் நடித்த ஜானியை யாராலும் மறக்க முடியுமா? முப்பது ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் கேட்டாலும் தித்திக்கும் காட்சிகள், இன்னிசை...
இன்னும்... பூட்டாத பூட்டுகள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி என இருவரும் இணைந்த படங்களின் இனிமை கண்ணுக்குள் நிற்கிறது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு
ஆனால் மகேந்திரன் கடைசியாக இயக்கிய சாசனம் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குகிறார் மகேந்திரன்.
ராஜா சம்மதம்
இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் பிரசாத் லேபுக்கு வந்த இயக்குநர் மகேந்திரன் இளையராஜாவை நேரில் சந்தித்து, தன் படத்துக்கு இசையமைக்குமாறு கேட்க, மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார் ராஜா.
இரண்டறக் கலந்த இசை
இதுகுறித்து இயக்குநர் மகேந்திரன் கூறுகையில், 'எனது படங்களில் இரண்டறக் கலந்தது இளையராஜா இசை. இந்தப் படத்திலும் அவரது இசைக்கு முக்கியப் பங்குண்டு. இந்த மாத இறுதியில் பாடல் பதிவு நடக்கிறது,' என்றார்.
புதுமைப்பித்தன் கதை
இந்தப் படமும் புதுமைப் பித்தனின் ஒரு சிறுகதையின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. கோவைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சிறு நகரத்தில் கதை நடப்பதாக திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நடுத்தர குடும்பங்களின் பிரச்சினையை தன் பாணியில் சொல்லப் போவதாகவும் மகேந்திரன் தெரிவித்தார்.
மார்ச்சில் படப்பிடிப்பு
பிரபல ஒளிப்பதிவாளர் பி லோகநாதனின் மகன் பி சஞ்சய் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் நடிகையர் தேர்வு மட்டும் இன்னும் முடியவில்லை. மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது.