SSMB 29: 10 ஆயிரம் கோடிக்கு ப்ளான் போடும் ராஜமௌலி.. மகேஷ் பாபு தாங்குவாரா?
ஹைதராபாத்: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும், இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியும் இணைந்துள்ள 'SSMB 29’ திரைப்படம், இந்தியாவிலேயே மிக அதிக பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ராஜமௌலி இந்த முறை படப்பிடிப்பு தாமதமின்றி நடைபெற சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.
'SSMB 29’ திரைப்படம் குறித்து திரையுலக வட்டாரங்களில் சுவாரஸ்யமான செய்திகள் பரவி வருகின்றன. ராஜமௌலி, மகேஷ் பாபுவுடன் இணைந்து உலக அரங்கில் தெலுங்கு சினிமாவின் திறனை மீண்டும் நிரூபிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 'பாகுபலி 1’, 'பாகுபலி 2’ மூலம் இந்திய அளவில் தெலுங்கு சினிமாவை எடுத்துச் சென்ற ராஜமௌலி, 'RRR’ திரைப்படம் மூலம் ஹாலிவுட் வட்டாரங்களில் தெலுங்கு சினிமாவின் பலத்தை வெளிப்படுத்தினார்.
10 ஆயிரம் கோடி பட்ஜெட்: மேலும், 'RRR’ திரைப்படம் ஆஸ்கர் விருதைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை வசூலை குவித்தது. தற்போது 'SSMB 29’ திரைப்படத்தின் மூலம் உலக பாக்ஸ் ஆபிஸில் ₹10,000 கோடிகளை வசூலிக்க ராஜமௌலி இலக்கு நிர்ணயித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இலக்கை அடைய, இத்திட்டத்திற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 'SSMB 29’ திரைப்படம் இந்தியா முழுவதுமின்றி, உலகின் 120 நாடுகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு சற்றும் சளைக்காத வகையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்கா மற்றும் கென்யா உட்பட பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதுவரை மூன்று கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன.
ஆயிரம் கோடி பட்ஜெட்: ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் இந்த படத்திற்காக பிரத்யேக செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆப்பிரிக்காவில் சாகச சண்டை மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், ஹைதராபாத் புறநகர் பகுதியில் படமாக்கப்படும் ஒரு ஸ்டைலான பாடல், உலக அளவில் ஹைதராபாத்தை பிரபலப்படுத்தும் என்று கூறப்படுகிறது.'SSMB 29’ திரைப்படம் மூலம் உலக அளவில் ஒரு புதிய அலை உருவாக்க ராஜமௌலி தயாராகி வருகிறார். இத்திரைப்படத்திற்கு 'Gen43’ என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. துர்கா ஆர்ட்ஸ் பதாகையின் கீழ் கே.எல். நாராயண தாஸ் ரூபாய் 1,000 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறார்.

படப்பிடிப்புத் தள வீடியோ: மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சர்வதேச நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சில ஹாலிவுட் நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம். கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார். அண்மையில் கூட படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் மகேஷ் பாபு சிங்கங்களுடன் உலா வரும் வீடியோ இணையத்தில் பரவியது. இதைப் பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை டிரெண்டாக்கினார்கள்.


Click it and Unblock the Notifications











