மணிரத்னம் படத்திலிருந்து விலகினார் மகேஷ் பாபு!
சென்னை: மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்ட மகேஷ் பாபு, படத்திலிருந்து விலகிக் கொண்டார்.
கால்ஷீட் இல்லாததால் விலகிக் கொண்டதாக மகேஷ் பாபு தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

தொடர் தோல்விகள்
அலைபாயுதே என்ற சுமாரான வெற்றிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வந்த எந்தப் படமும் ஓடவில்லை. அதற்கு முன்பும் கூட மணிரத்னம் இயக்கிய திருடா திருடா, இருவர், உயிரே ஆகிய மூன்று படங்கள் தொடர் தோல்வியைத் தழுவியவைதான்.

ராவணன்
அலைபாயுதேவுக்குப் பின் அவர் எடுத்த கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, குரு, ராவணன் போன்ற படங்கள் மோசமான தோல்வியைத் தழுவின. குறிப்பாக ராவணன்... ஐஸ்வர்யா ராய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் நடித்த அந்தப் படம் வெளியான அத்தனை மொழிகளிலும் தோல்வியைத் தழுவியது.

கடல்
அடுத்து தமிழில் மணிரத்னம் எடுத்த படம் கடல். அந்தப் படத்தை எதற்காக எடுத்தார்... இப்படியெல்லாம் கூட காட்சிகளை வைப்பார்களா என பார்த்த அத்தனை பேரும் கிண்டலடிக்கும் நிலைக்கு ஆளானது அந்தப் படம். இதுவரை வந்த மணிரத்னம் படங்களில் மோசம் என்று சொல்லப்பட்டது கடல்தான்.

தெலுங்கில்
இந்த நிலையில்தான் ஒரு புதிய படத்தை இயக்கி, தன் இருப்பை நிலைநிறுத்த விரும்பிய மணிரத்னம், இந்த முறை தெலுங்கைத் தேர்வு செய்தார். ஏற்கெனவே கீதாஞ்சலி (இதயத்தைத் திருடாதே) என்ற பெரிய வெற்றிப் படத்தைத் தந்திருக்கிறார் தெலுங்கில்.

நாகார்ஜூனா
அதே போன்றதொரு காதல் கதையை மையப்படுத்தி இந்த புதுப் படத்தை தயாரிக்க முடிவு செய்த அவர், நாகார்ஜுனாவை ஒரு நாயகனாகவும், மகேஷ் பாபுவை இன்னொரு நாயகனாகவும் ஒப்பந்தம் செய்தார்.

மகேஷ் பாபு விலகல்
ஆனால் மகேஷ் பாபு என்ன நினைத்தாரோ, திடீரென விலகிக் கொண்டார் இந்தப் படத்திலிருந்து. இப்போது மகேஷ் பாபுவுக்குப் பதில் வேறு இளம் நடிகரைத் தேடி வருகிறார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய், அசின், அரவிந்த் சாமி போன்றவர்கள் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
ஜூன் மாதம் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











