கயல் ஆனந்தியின் நடிப்பு பிரமாதம்.. ’ஸ்ரீதேவி சோடா சென்டர்’ படத்தை பார்த்து மிரண்டு போன மகேஷ் பாபு!
ஹைதராபாத்: நடிகை 'கயல்' ஆனந்தி மற்றும் ஸ்ரீதேவி சோடா சென்டர் படக்குழுவினரை பாராட்டி உள்ளார் டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு.
இயக்குநர் கருணா குமார் இயக்கத்தில் சுதீர் பாபு மற்றும் கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகி உள்ள தெலுங்கு திரைப்படம் தான் ஸ்ரீதேவி சோடா சென்டர்.
ஸ்ரீதேவி சோடா சென்டர் திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் மகேஷ் பாபு படம் ரொம்ப ராவாக எடுக்கப்பட்டு இருப்பதாகவும் நடிகை 'கயல்' ஆனந்தி பிரமாதமாக நடித்துள்ளார் என்றும் பாராட்டி உள்ளார்.

'கயல்' ஆனந்தி
ஈ ரோஜுலு எனும் தெலுங்கு திரைப்படம் மூலமாக சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர், கடந்த 2014ம் ஆண்டு பொறியாளன் மற்றும் கயல் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 'கயல்' படம் அவருக்கு விருதுகளை அள்ளி குவிக்க 'கயல்' ஆனந்தி என அழைக்கப்பட்டு வருகிறார்.

நல்ல கதைகளில்
நல்ல கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார் நடிகை ஆனந்தி. விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு மற்றும் சமீபத்தில் வெளியான கமலி ஃப்ரம் நடுக்காவேரி என இவர் நடிக்கும் அனைத்து படங்களுமே பாராட்டுக்களை அள்ளி வருகின்றன.

வெப்சீரிஸ்
திரைப்படங்களில் கலக்கி வந்த நடிகை ஆனந்தி வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால், வைபவ் நடிப்பில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் எனும் ஹாரர் வெப்சீரிஸிலும் நடித்து பட்டையை கிளப்பினார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

டோலிவுட்டில் வரவேற்பு
ஜாம்பி ரெட்டி எனும் தெலுங்கு படத்தில் சமீபத்தில் நடித்து முடித்த கயல் ஆனந்தி மீண்டும் தெலுங்கில் உருவாகி உள்ள ஸ்ரீதேவி சோடா சென்டர் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அந்த படமும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.

ஸ்ரீதேவி சோடா சென்டர்
70 எம்.எம் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் கருணா குமார் இயக்கியுள்ள ஸ்ரீதேவி சோடா சென்டர் சினிமா ரசிகர்களை மட்டுமின்றி பிரபலங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில், நாயகனாக சுதீர் பாபு நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ஆனந்தி நடித்திருக்கிறார்.

மகேஷ் பாபு பாராட்டு
ஸ்ரீதேவி சோடா சென்டர் திரைப்படத்தை பார்த்த டோலிவுட் உலகின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வரிசையாக சில ட்வீட்களை போட்டு இந்த படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். "ஸ்ரீதேவி சோடா திரைப்படம் ரொம்ப ராவாவும் ஆழமாகவும் இருக்கு.. இந்த படத்தின் ஹார்ட் ஹிட்டிங் கிளைமேக்ஸ் வேற லெவல். இயக்குநர் கருணா குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பலசா 1978 படம் போலவே இந்த படமும் மிரட்டுகிறது எனக் கூறியுள்ளார்.

ஸ்ரீதேவியா கலக்கிருக்காங்க
இந்த படத்தில் ஆனந்தியின் அப்பாவாக நடித்த நடிகர் நரேஷ் வழக்கம் போல பின்னியிருக்கிறார் என்றும், ஸ்ரீதேவியாக நடிகை ஆனந்தி இந்த படத்தில் வேற லெவல் நடிப்பை கொடுத்திருக்கிறார் என்றும் இந்த படத்தை மிஸ் பண்ணிடாதீங்க என்றும் ட்வீட் போட்டு படக்குழுவை பாராட்டி இருக்கிறார்.

ஆனந்தி நன்றி
டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவே இப்படியொரு பாராட்டை சொல்லி உள்ள நிலையில், சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து வருகிறார் நடிகை ஆனந்தி. மகேஷ் பாபுவின் ட்வீட்டுக்கு நன்றி சார் என ரிப்ளை கொடுக்க ஏகப்பட்ட மகேஷ் பாபு ரசிகர்களும் ஆனந்தியை வாழ்த்தி வருகின்றனர். சீக்கிரமே மகேஷ் பாபு படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கும் என வாழ்த்தி வருகின்றனர்.

என்ன கதை
நடிகை ஆனந்தி நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை போலவே சாதிக்கும் காதலுக்கும் இடையே ஏற்படும் மோதல்களும் இறுதியில் நடக்கும் த்ரில்லிங்கான கிளைமேக்ஸும் தான் இந்த ஸ்ரீதேவி சோடா சென்டர் படத்தின் கதை.


Click it and Unblock the Notifications











