வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரம்... வரித்துறை மீது நடிகர் மகேஷ்பாபு குற்றச்சாட்டு!
சென்னை : முன்னறிவிப்பு செய்யாமலேயே தனது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டதாக நடிகர் மகேஷ்பாபு குற்றஞ்சாட்டியுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் மகேஷ்பாபு. இவரது வங்கி கணக்குகளை வரித்துறையினர் நேற்று முடக்கினர். இதற்கு அவர்கள் கூறிய காரணம், கடந்த 2007-08ம் ஆண்டுகளில் நடிகர் மகேஷ்பாபு தூதுவராக இருந்து விளம்பரங்களில் நடித்ததற்கு சேவை வரி கட்டவில்லை என்பது தான். அதாவது, சேவை வரி ரூ.18.5 லட்சம் செலுத்தவில்லை என்று ஐதராபாத்தில் உள்ள ஜி.எஸ்.டி ஆணையகம் தெரிவித்தது.

இதுகுறித்து விளக்கம் அளித்து நடிகர் மகேஷ்பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஜி.எஸ்.டி ஆணையகம் அறிக்கையின்படி கடந்த 2007-08ம் ஆண்டில் பிராண்ட் அம்பாசிடர் சேவைக்கான வரியைக் கட்டவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.
அப்போதைய கால கட்டத்தில் பிராண்ட் அம்பாசிடர் சேவைக்கு வரி விதிக்கப்படவில்லை. 2010ம் ஆண்டில்தான் அந்த சேவைக்கு வரி விதிக்கப் பட்டது. வரி கட்டுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, வங்கிக் கணக்கு முடக்கம் தொடர்பான பல்வேறு விதிமுறைகள் வரி செலுத்துவோருக்கு ஆதரவாக இருக்கிறது.
ஆனால் ஜி.எஸ்.டி ஆணையகம் எந்த முன் அறிவிப்பும் இன்றி எனது வங்கிக் கணக்கை முடக்கி இருக்கிறது'' என அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











