தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு… மகேஷ் பாபுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், டோலிவுட் பிரபலங்கள் ஆறுதல்
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா மரடைப்பால் காலமானார்.
உயிரிழந்த நடிகர் கிருஷ்ணா, டோலிவுட் இளம் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணாவின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மகேஷ்பாபு வீட்டில் அடுத்தடுத்து சோகம்
டோலிவுட்டின் இளம் சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் மகேஷ் பாபுவுக்கு, இந்தாண்டு ரொம்பவே துயரமாக அமைந்துள்ளது. மகேஷ் பாபுவின் அண்ணன் கடந்த ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தனது வலது கரமாக இருந்த அண்ணன் உயிரிழந்ததில் இருந்தே மகேஷ் பாபு சோகத்தில் இருந்தார். ஆனால், அதனைத் தொடர்ந்து மகேஷ் பாபுவின் அம்மா இந்திரா தேவியும் செப்டம்பர் மாதம் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இப்போது மகேஷ் பாபுவின் தந்தையும் தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகருமான கிருஷ்ணாவும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
நேற்று மாலை மாரடைப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். தெலுங்கு திரையுலகில் பல புதிய முயற்சிகளுக்கு வித்திட்டவர் கிருஷ்ணா. அவரது மறைவு இந்திய திரையுலகிற்கே மிகப் பெரிய இழப்பாகும். மேலும், கிருஷ்ணாவை இழந்து வாடும் அவரது மகன் மகேஷ் பாபுவுக்கும் அவரின் குடும்பத்திற்கும் ஆறுதல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் இரங்கல்
முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியும் கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மறைவு திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பு. அவருடன் 3 படங்களில் சேர்ந்து நடித்துள்ளேன். அந்த நினைவுகள் அப்படியே மனதுக்குள் இருக்கின்றன. கிருஷ்ணாவை இழந்து வாடும் அவரது மகன் மகேஷ் பாபு உள்ளிட்ட குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என ட்வீட் செய்துள்ளார்.

நடிகர் சரத்குமார் இரங்கல்
அதேபோல், தமிழ் முன்னணி நடிகர் சரத்குமாரும் கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "நடிகர் கிருஷ்ணா மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல். சிறந்த நடிகர், அரசியல்வாதி என வலம் வந்த நடிகர் கிருஷ்ணாவின் மறைவு பெரும் இழப்பாகும். இந்நேரத்தில் கிருஷ்ணாவுடன் நடித்த நாட்களை நினைவுகூர்ந்து, இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

சிரஞ்சீவி, பிரபாஸ் இரங்கல்
மேலும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், கிருஷ்ணாவின் மறைவு தெலுங்கு திரையுலகுக்கு மிகப் பெரிய இழப்பாகும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதேபோல், நடிகர் பிரபாஸும் கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் கிருஷ்ணாவின் மறைவு செய்திக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். உறுதியான மனநிலையில் இருங்கள் மகேஷ் பாபு அண்ணா என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராஜமெளலி, ஜூனியர் என்.டி.ஆர் இரங்கல்
இவர்களைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என் டி ஆர், இயக்குநர் ராஜமெளலி ஆகியோரும் நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மறைவு தெலுங்கு திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் மகேஷ் பாபுவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளனர். அதேபோல், பல முன்னணி நடிகர்களும் நடிகைகளும் கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











