தாதா பெயரைச் சொல்லி.. ரூ.35 கோடி கேட்டுப் பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்.. ஒருவர் அதிரடி கைது!
சென்னை: பிரபல தாதா பெயரைச் சொல்லி, நடிகரிடம் ரூ.35 கோடி மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
பிரபல இந்திப் பட நடிகர் மகேஷ் மஞ்சரேக்கர். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், தமிழ், தெலுங்கு, மராத்தி உள்பட பிற மொழிகளிலும் நடித்துள்ளார்.
தமிழில், அஜித் நயன்தாரா நடித்த ஆரம்பம் படத்தில் மத்திய உள்துறை அமைச்சராக நடித்திருந்தார்.

வேலைக்காரன்
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த வேலைக்காரன், பிரபாஸின் சாஹோ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மும்பையில் வசித்து வரும் இவர், தெலுங்கில் டான் சீனு, குண்டூர் டாக்கீஸ், விநயா வினேத ராமா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சஞ்சய் தத், மகிமா நடித்த குருஷேத்ரா, சஞ்சய் தத், சுனில் ஷெட்டி நடித்த ரக்த், சிட்டி ஆஃப் கோல்டு உள்பட சுமார் 20 படங்களை இயக்கி உள்ளார்.

ரூ.35 கோடி வேண்டும்
சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். பிக்பாஸ் மராத்தி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி உள்ளார். கொரோனா காரணமாக இப்போது படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருக்கிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு போன் வந்தது. அதில் பேசியவர், தான் தாதா அபுசலீமின் கோஷ்டியை சேர்ந்தவன் என்றும் ரூ.35 கோடி தர வேண்டும் எனவும் இல்லை என்றால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

தாதர் போலீஸ்
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த, நடிகரும் இயக்குனருமான மகேஷ் மஞ்சரேக்கர், மும்பை தாதர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனக்கு வந்த போன் நம்பரையும் அவர் போலீசிடம் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் அந்த போன் நம்பரை வைத்து, அந்த மர்மநபருக்கு வலை வீசினர். அந்த போன் அழைப்பு ரத்னகிரி பகுதியில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது.

பொருளாதாரச் சிக்கல்
இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர். அவர் பெயர் மெலின் துஷார் என்பது தெரியவந்தது. இதுபற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் அரவிந்த் பவார் கூறும்போது, 'அந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் டீ கடை நடத்தி வருவது தெரியவந்தது. கொரோனா காரணமாக பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் இப்படி பணம் பறிக்க முயன்றுள்ளார்.

போனில் மிரட்டல்
அபு சலீம் கோஷ்டி எப்படி, பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் என்பதை இணையத்தில் தேடியிருக்கிறார். அதை வைத்து முதலில் மெசேஜ் அனுப்பியும் பிறகு போனில் மிரட்டலும் விடுத்துள்ளார். இதையடுத்து அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம்' என்றார். தாதா பெயரைச் சொல்லி, சஞ்சய் மஞ்சரேக்கரை மிரட்டி பணம் கேட்டது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











