ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை, இயக்குநரை தாக்கிய ரவுடிகள்: அதிர்ச்சி வீடியோ
Recommended Video
மும்பை: ஃபிக்சர் வெப் தொடருக்கான ஷூட்டிங் நடந்த இடத்திற்கு குடிபோதையில் வந்தவர்கள் நடிகை உள்ளிட்ட குழுவை தாக்கியுள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகை மாஹி கில் நடித்து வரும் வெப் சீரீஸ் ஃபிக்சர். அந்த தொடரின் ஷூட்டிங் மும்பையில் உள்ள பேக்டரி ஒன்றில் நடந்துள்ளது. முறையாக அனுமதி பெற்று தான் ஷூட்டிங் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் அங்கு வந்த ரவுடிகள் மாஹி உள்ளிட்டோரை அடித்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் தலையில் கட்டுடன் உள்ளார். தொடரின் தயாரிப்பாளர் சாகேத் சாவ்னி நடந்ததை விவரிக்க மாஹி கில் அழுதுவிட்டார். இந்த சம்பவத்தில் போலீசாருக்கு தொடர்பிருப்பதால் அவர்களின் உதவியை நாடவில்லை என்கிறார்கள். இதையடுத்து மக்களிடம் உதவி கேட்டு ஏக்தா கபூர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து தயாரிப்பாளர் சாகேத் கூறியதாவது,
நாங்கள் முறையாக அனுமதி பெற்று, லொகேஷன் மேனேஜருக்கு பணம் கொடுத்து பேக்டரியில் ஷூட்டிங் நடத்தினோம். காலை 7 மணியில் இருந்து ஷூட்டிங் நடந்தது. மாலை 4.30 மணி அளவில் 4 பேர் குடிபோதையில் கையில் கட்டை, இரும்பு கம்பிகளுடன் வந்தனர். அவர்கள் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை தாக்கினார்கள்.
அவர்களின் அனுமதி இல்லாமல் ஷூட்டிங் நடத்த முடியாது என்று தெரிவித்தனர். அவர்கள் குடித்திருந்ததால் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை. பெண்களை கூட தாக்கினார்கள்.
அவர்கள் தாக்கியதில் ஒளிப்பதிவாளருக்கு தையல் போட வேண்டியதாகிவிட்டது. இயக்குநருக்கு தோள்பட்டை எலும்பு நகர்ந்துவிட்டது. மாஹி கில்லையும் தாக்கினார்கள். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரோ எங்களின் உபகரணங்களை எடுத்துக் கொண்டு நீதிமன்றத்தில் வாங்கி கொள்ளுங்கள் என்றார்கள்.
காம்பவுண்டு கேட்டை பூட்டிவிட்டு எங்களை வெளியே செல்ல விடாமல் தடுத்த போலீசார் பணம் கேட்டார்கள். இதையடுத்து தான் போலீசில் புகார் அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். ரவுடிகளுடன் சேர்ந்து போலீசாரும் எங்களை இப்படியா செய்வது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மாஹி கில் கூறும்போது, அவர்கள் என்னை அடிக்கத் துவங்கியதும் நான் வேனிட்டி வேனுக்குள் ஓடிவிட்டேன். அவர்கள் செட்டில் இருந்தவர்களை மிருகங்களை போன்று அடித்தார்கள். எங்களை அடிக்குமாறு போலீசாரே அந்த ரவுடிகளிடம் தெரிவித்தனர். அதனால் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப் போவது இல்லை என்றார்.


Click it and Unblock the Notifications











