எல்லை பிரச்னை.. இந்தியா-சீனா மோதலை படமாக்கும் இயக்குனர் மேஜர் ரவி.. ஹீரோவாக நடிப்பது அவரா, இவரா?
சென்னை: கல்வான் பிரச்னையில் இந்தியா- சீனா மோதிக்கொண்ட பிரச்னையை மையமாக வைத்து சினிமா எடுக்க இருக்கிறார் மேஜர் ரவி
Recommended Video
தமிழில், ஜீவா, மோகன்லால் நடித்த அரண் படத்தை இயக்கியவர் மேஜர் ரவி. இந்தப் படத்தில் கோபிகா, பிஜூமேனன் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் மலையாளத்தில் கீர்த்தி சக்கரா என்ற பெயரில் வெளியானது.

மிஷன் 90 டேஸ்
இதையடுத்து ராஜீவ்காந்தி கொலையாளிகளை பிடிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து, மிஷன் 90 டேஸ் என்ற படத்தை இயக்கினார். இதில் மம்மூட்டி, ராணுவ மேஜராக நடித்திருந்தார். இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. அடுத்து குருஷேத்ரா, கந்தகார் உட்பட சில போர் படங்களை இயக்கினார். டிரைவிங் லைசன்ஸ், வரனே அவஷியமுண்டு உட்பட சில படங்களில் நடித்தும் உள்ளார்.

எல்லைக் கட்டுப்பாடு
இவர் இப்போது கல்வான் பிரச்னையை மையமாக வைத்து, படம் ஒன்றை இயக்க இருக்கிறார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த 15, 16 ஆம் தேதியில் இந்திய, சீன படைகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர்.

இயக்குனர் மேஜர் ரவி
சீன தரப்பில் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த எண்ணிக்கையை சீனா உறுதிப்படுத்தவில்லை. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சீன படையினர் அத்து மீறியதாக இந்தியாவும், இந்திய வீரர்கள் அத்துமீறியதாக சீனாவும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் இநக்ச் சம்பவத்தை மையமாக வைத்து சினிமா இயக்குகிறார் மேஜர் ரவி.

கல்வான் பிரச்னை
இதுபற்றி அவர் கூறும்போது, இதுவரை இந்தியா -பாகிஸ்தான் மோதல் பற்றிதான் படங்கள் இயக்கி வந்தேன். இப்போது கல்வான் பிரச்னையை மையடுத்தி படம் இயக்க இருக்கிறேன். இதற்கு, பிரிட்ஜ் ஆன் கல்வான் என்று டைட்டில் வைத்துள்ளேன். கடந்த கால சில சம்பவங்களையும் இந்தப் பிரச்னைக்கு அது எப்படி வழிவகுத்தது என்பதையும் சொல்ல இருக்கிறேன்.

மோதலுக்கு காரணம்
கல்வான் ஆற்றில் 60 மீட்டர் நீளத்துக்கு கட்டிய பாலத்தை மையப்படுத்தி கதை இருக்கும். இந்த பாலம்தான் இப்போதைய மோதலுக்கும் காரணம். ஏனென்றால், துருப்புகளை கொண்டு செல்வதற்கு இந்தப் பாலம் முக்கியமான ஒன்றாக அமைந்துவிட்டது. தற்போதைய எல்லைப் பகுதியில் உள்ள அக்ஷாய் சின்-ஐ இந்தியா மீண்டும் கைப்பற்றிவிடுமோ என்ற சீனா கவலைப்படுகிறது. அதுதான் மோதலுக்கு காரணம்' என்கிறார் மேஜர் ரவி.

சம்பவம் நடந்த இடங்கள்
இது, பான் இந்தியா படம். தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் உருவாக இருக்கிறது. 'இப்போது ஆரம்ப கட்ட நிலையில் இருப்பதால், யார் நடிக்கிறார்கள் என்பதை சொல்ல இயலாது. வழக்கமாக எனது படங்களை நிஜமாகவே சம்பவம் நடந்த இடங்களில் படம் பிடிப்பேன். இதன் ஷூட்டிங்கை, லே, லடாக் பகுதியில் எடுக்க திட்டமிட்டுள்ளேன். ஜனவரியில் ஷூட்டிங்கை தொடங்க இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மோகன்லால் அல்லது மம்மூட்டி ஹீரோவாக நடிப்பார்கள் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











