திரையுலகில் பெருஞ்சோகம்.. தேசிய விருது பெற்ற தனுஷ் பட நடிகர் திடீர் மறைவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை: மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 56. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு (சனிக்கிழமை) உயிரிழந்தார். அவரின் திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் உடல்நலக் குறைவு: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சலீம் குமார் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு நலமாக இருந்த நிலையில், திடீரென நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, நேற்று கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தநிலையில்,திடீரென உடல்நிலை மோசமாகி இரவு 10.43 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்

மிமிக்ரி டூ தேசிய விருது: மிமிக்ரி கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய சலீம் குமார், 1997 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமானார். 2000-களின் தொடக்கத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த இவர், பின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக மாறி, 30 ஆண்டுகால சினிமா பயணத்தில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 'அச்சனுறங்காத வீடு' (Achanurangatha Veedu) படத்திற்காக கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். 'ஆதாமின்றெ மகன் அபூ' (Adaminte Makan Abu) படத்தில் இவரது அசாத்திய நடிப்பிற்காக தேசிய அளவிலும், கேரள மாநில அளவிலும் சிறந்த நடிகருக்கான விருதை வென்று சாதனை படைத்தார். தமிழில் இவர் தனுஷ் நடித்த மரியான் படத்திலும், ஆரி நடிப்பில் வெளியான நெடுஞ்சாலை படத்திலும் நடித்துள்ளார்.
ரசிகர்கள் இரங்கல்: இவரது திடீர் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரது மறைவுக்கு கேரள அரசியல் தலைவர்கள், மலையாள மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சலீம் குமார் வெறும் சினிமா நடிகர் மட்டுமல்ல, எனக்கு ஒரு சகோதரர் போன்றவர் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். மறைந்த சலீம் குமாருக்கு சுனிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது மறைவு மலையாள சினிமா உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என இணையத்தில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications