போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு.. தலைமறைவாக இருந்த GBU நடிகர் சாக்கோ கைது.. அசத்திய மலபார் போலீஸ்!
கொச்சி: பிரபல மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ. அவர் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கொச்சியில் தனியார் ஹோட்டலில் நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது தப்பி ஓடியது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அவர் தப்பி ஓடியதாக சிசிடிவி வீடியோக்கள் கூட இணையத்தில் வேகமாக பரவியது. இப்படியான நிலையில் இவர் தற்போது கொச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் நான்கு மணி நேர விசாரணைக்குப் பின்னர் நடிகர் சாக்கோ கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் மொத்த மலையாளத் திரையுலகமும் பரபரப்பாக உள்ளது. இவர் சமீபத்தில் வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான பசூகா படத்திலும் நடித்திருந்தார்.

போதைப் பொருட்களை பயன்படுத்துவது, போதைப் பொருட்களை விநியோகம் செய்வது போன்ற நடவடிக்கைகளின் கீழ் பல திரைப்பிரபலங்கள் இதற்கு முன்னர், பல்வேறு திரையுலகில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வரிசையில்தான் நடிகர் சைன் டாம் சாக்கோவும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது முதன் முதலில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக புகார் அளித்தவர் என்றால், அது, நடிகை வின்சி அலோசியஸ்தான். இவர் கேரள திரைப்பட வர்த்தக சபை மற்றும் மலையாள திரைப்படத் துறையில் முதன்முதலாக புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், 'சூத்ரவாக்கியம்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில், நடிகர் சைன் டாம் சாக்கோ போதையில் இருந்தபோது தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்திருந்தார்.
இது மட்டும் இல்லாமல், இவர் இனிமேல் மது மற்றும் வேறுவிதமான போதைப் பொருட்களைப் பயன்படுத்திவிட்டு படப்பிடிப்புத் தளத்திற்கு வருபவர்களுடன் தான் இணைந்து நடிக்க மாட்டேன் எனவும் இன்ற்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் தான், கேரள திரைப்படத் துறையில், ஓய்வு பெற்ற நிதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி அளித்த பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை பகீர் கிளப்பியது. இந்நிலையில் நடிகர் சைன் டாம் சாக்கோ மீது நேரடியாகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.
இது எல்லாம் ஒரு புறம் இருக்க, இந்த மாதம் கேரள மாநிலத்தில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் வியாபாரியான பெண் ஒருவர், விசாரணையின் போது நடிகர் சைன் டாம் சாக்கோ மற்றும் நடிகர் ஸ்ரீநாத் பாசி ஆகியோரது பெயரைக் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர்தான் நடிகர் சைன் டாம் சாக்கோவை காவல்துறை வலைவீசி தேடி வந்துள்ளது. நடிகரைத் தேடி அவர் தங்கியுள்ள ஹோட்டலுக்கு காவல்துறையினர் வந்தது குறித்து தெரிந்து கொண்ட நடிகர் சாக்கோ, அங்கிருந்து உடனே தப்பித்துவிட்டார். இது தொடர்பான தகவல்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது.

இப்படியான நிலையில்தான் நடிகர் சைன் டாம் சாக்கோவை கேரள மாநில காவல்துறை பிடித்து விசாரித்துள்ளது. சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர், அவரை காவல்துறை கைது செய்துள்ளது. போதைப்பொருள் மற்றும் மனநோய் மருந்துகள் (NDPS) சட்டத்தின் பிரிவு 27 (எந்தவொரு போதைப்பொருள் அல்லது மனநோய் பொருளை உட்கொள்வது) மற்றும் பிரிவு 29 (துன்புறுத்தல் மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல்) ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் போதைப்பொருள் உட்கொண்டது தொடர்பாக மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்பதால் மேலும் பல திரைப்பிரபலங்கள் இந்த வழக்கில் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











