பணமா? பெரிய ஸ்டார்களா? மலையாள நடிகர்கள் தமிழில் டம்மியாக இருக்க காரணம் என்ன?
சென்னை: கமர்ஷியல் படங்களைக் கடந்து உண்மைக்கு நெருக்கமான, யதார்த்தமான சினிமாக்கள் மீது ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வகைப் படங்களை விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருக்கிறது. தென்னிந்திய சினிமாக்களில் உண்மைக்கு நெருக்கமான சினிமாக்களை கொடுக்கும் திரையுலகமாக இருப்பது மலையாள சினிமா மட்டும் தான். மலையாளத்தில் நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகர்கள், நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் நடிகர்கள் தமிழில் அதிலிருந்து விலகி இருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தாமல் இல்லை.
ஓடிடி தளங்கள் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலான பின்னர், அனைத்து மொழிப் படங்களும் ரசிகர்கள் பார்க்கிறார்கள். யதார்த்த சினிமா என்றாலே மலையாள சினிமா தான் என்ற எண்ணம் இயல்பாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. மலையாள சினிமா குறித்த விவாதங்கள் ரசிகர்கள் பெரும்பாலும் பாராட்டுவது, " மலையாள சினிமா பாடல்களில் சம்பந்தமே இல்லாத குரூப் டான்ஸ்கள் கிடையாது. தமிழ் சினிமாவைப் போல அங்கு நடிகர்களுக்கு அதிகப்படியான சம்பளம் கிடையாது. மலையாள சினிமாவின் மார்க்கெட் என்பது கணிசமான அளவில் வசூலைக் குவிக்கும் திரையுலகம் தான். நடிகர்கள் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை அட்டகாசமாக நடிக்கிறார்கள் என அந்த பட்டியல் இருக்கும்.
இன்றைக்கு மலையாள நடிகர்கள் தமிழிலும் நடிக்கத் தொடங்கி விட்டார்கள். அதற்கு காரணம் அவர்கள் திறமையான நடிகர்கள் என்பதுதான் முதன்மையாக இருக்கும். மலையாளத்தில் நல்ல நல்ல படங்களைக் கொடுத்த நடிகர்கள் தமிழில் நடிக்கும் போது படு சொதப்பலான படங்களைக் கொடுக்கிறார்கள். " இந்த நடிகர் மலையாளத்தில் தரமான படத்தைக் கொடுத்தவராச்சே. அவர் நடித்துள்ளார் என்றால் படம் நன்றாக இருக்கும் போலயே. இந்த படத்தை தியேட்டரில் பார்க்கவேண்டும்" என முடிவெடுக்கிறார்கள்.

ஜோஜு ஜார்ஜ்: மலையாளத்தில் கலக்கும் மலையாள நடிகர்கள் தமிழில் சொதப்புகிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் நடிகர் ஜோஜு ஜார்ஜ். இவர் நடித்த தக் லைஃப், ரெட்ரோ படங்களைச் சொல்லலாம். தக் லைஃப் படத்தோடு ஒப்பிடுகையில் ரெட்ரோ படத்தில் கதாபாத்திரமாகவாவது ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தக் லைஃப் படத்தை எந்த லிஸ்ட்டில் வைப்பது. மிக.. மிக.. மிக.. என பல மிக என எழுதி அதன் அருகில் மோசம் என எழுதும் அளவுக்கான கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தை ஜோஜு ஜார்ஜ் தேர்வு செய்ய என்ன காரணமாக இருக்கும்?
என்ன காரணம்?: கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதாலா? மணிரத்னம் இயக்கம் என்பதாலா? அல்லது மலையாள சினிமாவை காட்டிலும் தமிழில் அதிக சம்பளம் கிடைக்கிறது என்பதா? வாழை படத்தில் நடித்த நிகிலா விமல் விருது நிகழ்ச்சி ஒன்றில், மலையாள சினிமாவை காட்டிலும் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் எனக் கூறியிருந்தார். அவர் சொன்னது போல இதுவும் ஒரு காரணமாக இருக்குமா? என்ற கேள்வி இயல்பில் எழாமல் இல்லை. ஏற்கனவே தமிழ், தெலுங்கு சினிமாக்களைப் பார்த்து எடுக்கப்பட்ட பக்கா கமர்ஷியல் படமாக எம்புரான் வசூல் ரீதியாக பெரும் வெற்றியைக் கொடுத்தது.

சந்தேகம்: இந்த வெற்றி சினிமா ரசிகர்களுக்கே, இனி மொத்த மலையாள சினிமாவும் கமர்ஷியலில் களமிறங்கி விடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது. தமிழில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்த மஞ்சு வாரியரே பெரிய நடிகர்களின் படங்களில் சில சொதப்பலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். லால், ஃபகத் ஃபாசில் , துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா போன்றவர்கள் மட்டுமே ரசிகர்களின் நம்பிக்கை தொடர்ந்து காப்பாற்றி வருபவர்களாக உள்ளார்கள். இவர்களும் எவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.


Click it and Unblock the Notifications











