மூளைச் சாவு.. சிகிச்சைப் பெற்று வந்த பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்!
கொச்சி: மூளைச்சாவு அடைந்து சிகிச்சைப் பெற்று வந்த சினிமா இயக்குனர் திடீரென மரணமடைந்தார்.
மலையாளத்தில் உருவான படம், சூஃபியும் சுஜாதாயும். இந்தப் படம் கொரோனா காலகட்டத்தில், கடந்த ஜூலை மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது.
ஓடிடியில் வெளியான முதல் மலையாள படம், இதுதான். அமேசான் பிரைமில் இந்தப் படம் வெளியானது.

நரனிபுழா ஷாநவாஸ்
இதில் ஜெயசூர்யா, அதிதி ராவ் ஹைதாரி, தேவ் மோகன், சித்திக் உட்பட பலர் நடித்திருந்தனர். இதை இயக்கியவர் நரனிபுழா ஷாநவாஸ். இந்நிலையில் இவர் தனது அடுத்தப்படத்துக்கான படப்பிடிப்புக்காக அட்டப்பாடி வந்திருந்தார். அங்கு அவருக்குத் திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது.

தீவிர சிகிச்சை
இதையடுத்து படப்பிடிப்பில் இருந்தவர்கள், அவரை கோயமுத்தூரில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

கொச்சி மருத்துவமனை
இந்நிலையில், அவரை கோவையில் இருந்து கொச்சியில் உள்ள மருத்துவமனைக்கு நேற்றிரவு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னர் நேற்றிரவு அவர் மரணமடைந்தார். இது மலையாள சினிமாதுறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ள இரங்கலில், மலையாள சினிமா, நம்பிக்கையான இயக்குனர் ஒருவரை இழந்துவிட்டது என்று கூறியுள்ளார். சூஃபியும் சுஜாதாயும் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய் பாபு, நடிகர் ஜெயசூர்யா உட்பட பலர் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதிதி ராவ் ஹைதாரி
இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதாரி, அந்த படத்தின் சில ஸ்டில்களை வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் கதைகளை போலவே அவரும் அமைதியானவர். இவ்வளவு விரைவாகச் சென்றுவிட்டார்.

சூஃபி ஆத்மா
உங்களுடைய சூஃபி ஆத்மா, எங்களுக்காக நீங்கள் உருவாக்கிய சூஃபியும் சுஜாதாயும் போல அழகான இடத்தைக் கண்டுபிடிக்கும் என நம்புகிறேன். அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் எனக் கூறியுள்ளார். ஏராளமான ரசிகர்களும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











