புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்... மறைந்த இயக்குநர் சேதுமாதவனுக்கு கமல் அஞ்சலி
சென்னை : மலையாளத்தின் மூத்த இயக்குநர் கேஎஸ் சேதுமாதவன் காலமானார்.
மலையாளத்தில் நடிகர் கமல்ஹாசனை அறிமுகப்படுத்தியவர் சேதுமாதவன்.
இதனிடையே நடிகர் கமல்ஹாசன் சேதுமாதவன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சேதுமாதவன் மறைவு
மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக அறியப்பட்ட இயக்குநர் கேஎஸ் சேதுமாதவன் காலமானார். அவருக்கு வயது 90. மலையாளத்தில் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பிற மொழித் திரைப்படங்களையும் இயக்கியவர் சேதுமாதவன்.

கேரள அரசின் உயரிய விருது பெற்றவர்
மலையாளத்தில் கடந்த 1961ல் வெளியான ஞானசுந்தரி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சேதுமாதவன், தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். மலையாள திரையுலகில் இவரது சிறப்பான பங்களிப்பிற்காக கேரள அரசின் உயரிய விருதான ஜேசி டேனியல் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பான திரைக்கதைகள்
நல்ல கதைகளை சிறந்த திரைக்கதைகளாக மாற்றி திரைப்படம் எடுக்கும் வல்லமை படைத்தவர் சேதுமாதவன். மிகவும் நாகரிகமாக பழகக்கூடியவர் என்ற பாராட்டை பெற்றவர். இவர் இந்தியில் இயக்கிய ஜூலி படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இதில் பாலிவுட் நடிகர் விக்ரம் மற்றும் லட்சுமி நடித்திருந்தனர்.

கமலை மலையாளத்தில் அறிமுகப்படுத்தியவர்
தமிழ் மட்டுமின்றி இந்திய அளவில் மற்ற மொழிப்படங்களிலும் நடித்துள்ளவர் கமல்ஹாசன் என்பது தெரிந்ததே. அவரை மலையாளத்தில் அறிமுகப்படுத்தியவர் சேதுமாதவன். மேலும் தமிழில் வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்ற கமலின் நம்மவர் படத்தையும் சேதுமாதவன் இயக்கியுள்ளார். மேலும் எம்ஜிஆரின் நாளை நமதே, மறுபக்கம் போன்ற படங்களையும் தமிழில் இவர் இயக்கியுள்ளார்.

உடல்நலக்குறைவால் மறைவு
சென்னையில் வசித்துவந்த சேதுமாதவன், உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனும் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் சேதுமாதவனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கமல் அஞ்சலி
காலத்தால் அழியாத காவியங்களை திரையில் படைத்த கேஎஸ் சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம் என்று கமல் தெரிவித்துள்ளார். மேலும் மலையாள சினிமாவின் தரத்தை தீர்மானித்த அடிப்படை விசைகளில் ஒருவர் என்றும் கமல் குறிப்பிட்டுள்ளார்.

நல்ல சினிமாவை கற்பித்த ஆசான்
தன் கலைசாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார் என்று தெரிவித்துள்ள கமல், என் சேது சாருக்கு நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள் என்றும் கமல் குறிப்பிட்டுள்ளார். எம்ஜிஆர் நடிப்பில் வெளியான நாளை நமதே படத்தை இயக்கி வெற்றிப்படமாக்கினார். இந்நிலையில் இன்றைய தினம் எம்ஜிஆரின் நினைவுநாளில் சேதுமாதவனும் மறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











