நடிகரை மிரட்டி விட்ட தயாரிப்பாளர்.. தொடங்கிய புது பஞ்சாயத்து.. ரவுண்ட் கட்டிய இணையவாசிகள்!
கொச்சி: மலையாள சினிமா நடிகர் திலீப்பின் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரண்ட்ஸ் அன்ட் ஃபேமிலி. இந்த படத்தின் தயாரிப்பாளர், லிஸ்டின். இவர் சமீபத்தில் பிரண்ட்ஸ் அன்ட் ஃபேமிலி படத்தின் புரோமோசன் நிகழ்ச்சியின் போது பேசிய விஷயம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, " நடிகர் திலீப் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரது படங்கள் பலவும் என்னை சந்தோஷப் படுத்தி உள்ளது. நான் சிறு வயதில் இவரது படங்களை பார்த்தபோது, இவர் படங்களில் வரும் இடங்களுக்குச் சென்று பார்ப்பேன். ஆனால் நான் அவருடன் பணியாற்றுவேன் என்று நினைத்ததில்லை. நான் சினிமாவுக்குள் வந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிறது. நான் பல நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனால் திலீப் சார் எனக்கு மிகவும் ஸ்பெஷலானவர். இது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்து பலரும் படம் குறித்து நெகட்டிவிட்டியைப் பரப்பி வருகிறார்கள்.
ஆனால் எங்களுக்கு அது குறித்து எந்த கவலையும் இல்லை. மேலும் தொடர்ந்து நெகட்டிவிட்டியைப் பரப்பும்போது, திலீப் சாரே என்னிடம் அது குறித்து பேசினார். ஆனால் இந்த படத்தை நாம் கட்டாயம் முடிக்க வேண்டும் என நான் அவரிடத்தில் கூறினேன். அதற்கு காரணம் அவர் மட்டும் தான். தொழில் வாழ்க்கையையும் சொந்த வாழ்க்கையையும் இணைத்து வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தை நாங்கள் மக்கள் முன் வைக்கிறோம். படம் பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்பதை அவர்களே முடிவு சொல்லட்டம்" என பேசினார்.

மிரட்டல்: மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், " இங்கு ஒரு முக்கியமான நடிகர் ஒருவர் உள்ளார். அவர் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். நான் இப்படி பேசுவதை அவர் பார்ப்பார் என்று நினைக்கிறேன். மேலும் அந்த பெரிய நடிகர் மிகப்பெரிய தவறைச் செய்துள்ளார் என்பதை உங்களுக்கும் சொல்லுகிறேன். அவர் இதுபோன்ற தவறை மீண்டும் செய்ய கூடாது. அதேபோல், அவர் அந்த தவறை மீண்டும் செய்தால் பல பிரச்னைகளை அவர் சந்திக்க வேண்டி இருக்கும் என அவரை நான் எச்சரிக்கிறேன்" என பேசியுள்ளார்.
யார் அது: அவரது பேச்சில் அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று பெயர் குறிப்பிடாததால், இணையவாசிகள் பலரும் தயாரிப்பாளர் லிஸ்டினைப் போட்டு வறுத்து எடுத்து வருகிறார்கள். அதாவது, " ஒருவர் செய்த தவறை பற்றி பேசுகிறீர்கள் என்றால், அவர் என்ன தவறு செய்தார் என்பதைப் பேச வேண்டும். அதேபோல் அவர் யார் என்றும் கூறவேண்டும். இப்படி தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் ஒரு விஷயத்தை பேசுவது என்பது வெறும் விளம்பரத்திற்காக மட்டும்தான் என்று யோசிக்க வைக்கிறது என்று ஒரு இணைய வாசி தெரிவித்துள்ளார்.

தைரியம்: அதேபோல் மற்றொருவர், " உங்களுக்கு நடிகரின் பெயரை சொல்ல தைரியம் இல்லை என்றால், எதற்காக இந்த விஷயத்தை பொதுவெளியில் பேச வேண்டும்? நேரடியாக நடிகரின் தொலைபேசிக்கு போன் போட்டு அவரிடம் பேச வேண்டியது தானே? அதை விட்டுவிட்டு எதற்காக படத்தின் விளம்பரத்திற்காக இப்படி நடந்து கொள்கிறீர்கள்? படத்தை நல்ல முறையில் விளம்பரப்படுத்துங்கள்" என பதிவிட்டுள்ளார். இவரது பேச்சும், அதற்கு இணையவாசிகளின் ரியாக்ஷனும் மலையாள சினிமாவில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











