Vedan: கேரளாவின் தெருக்குரல் அறிவா ராப் பாடகர் வேடன்?.. ஒடுக்குமுறையை இளம் ரத்தம் பொறுத்துக்குமா?
கொச்சி: இணையமே அதிரும் அளவுக்கு டிரெண்டாகி வரும் பெயர் வேடன். கேரளாவின் புகழ்பெற்ற ராப் பாடகராக வளர்ந்து நிற்கும் அவர் குறித்த வீடியோக்கள் எக்ஸ் பக்கம் தொடங்கி, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நிறைந்து இருக்கிறது. வேடனின் ராப் பாடல்கள் வெறுமனே சினிமாத்தனமாக இல்லாமல், நிஜத்தை பேசுகிற, உண்மையை பிரதிபலிக்கிற வலிமையான சொற்களோடு இருப்பதால் அவரது பாடல்கள் பலரும் குத்தூசி ஆக மாறி நிற்கிறது. இதனால் அவருக்கு ஒருபுறம் எதிர்ப்பு கிளம்பினாலும் அவருக்கு ஆதரவாக பெரும் படையே இணையத்தில் குவிந்து நிற்கும் அளவிற்கு வேடன் என்ன செய்துவிட்டார்? அவர் யார் என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.
வேடன் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த மலையாள தலித் அப்பாவுக்கும் பிறந்தவர். 30 வயதாகும் இந்த ராப் பாடகர் வேடன் தான் சார்ந்த ஒடுக்கப்பட்ட சமூகம் குறித்து பேச வேண்டும். அது பலரது கவனத்திற்குச் செல்ல வேண்டும், என்ற எண்ணத்தில் அவர் முடிவு செய்தது தான் கலை வடிவில் தனது கருத்தைச் சொல்வது. குறிப்பாக பாடல்கள் வடிவில் பேசிவந்தார். தனது பாடல்களை ராப் வடிவில் அவர் மாற்றிய போது பலரது கவனமும் அவர்மீது திரும்பியது.

கடந்த 2020ஆம் ஆண்டு இவரது " வாய்ஸ் ஆஃப் வாய்ஸ் லெஸ்" என்ற ஆல்பம் வெளியானது. இதற்கு ஏகோபித்த ஆதரவு மக்கள் மத்தியில் கிடைத்தது. அவரது பாடல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. இவரது பாடல்கள் அரசியல் தளத்திலும் எதிரொலித்தது. தமிழில் இயக்குநர் பா. ரஞ்சித் ஒருங்கிணைத்த "தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்" என்ற இசைக் குழு தமிழில் பாவலர் வரதராசன் இசைக்குழுவிற்கு பின்னர் சாதி, மத, பாலின, வர்க்க பேதங்களை கேள்வி கேட்கிற, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிற இசைக் குழுவாக உருவானது. (பாவலர் வரதராசரின் இசைக்குழுவில் இசைஞானி இளையராஜா, கங்கை அமரன் உள்ளிட்டோர் இருந்தனர்) பலரும் முற்போக்கு அரசியல் கருத்துகள் நிறைந்த பாடல்களை பாடியிருந்தாலும் ஒரு இசை குழுவாக பாவலர் குழுவிற்குப் பின்னர், தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக் குழுவே ஒரு இசை குழுவாக உருவானது.
தெருக்குரல் அறிவு: இந்த இசைக்குழுவில் மிகவும் முக்கியமானவர் என்றால் அது தெருக்குரல் அறிவு. காரணம் தெருக்குரல் அறிவு பாடல்களை பாடுவது மட்டும் இல்லாமல், பாடல்களை எழுதியும் வருகிறார். அவரது வரிகள் பலரது தூக்கத்தை கெடுத்துள்ளது என்று தாராளமாக கூறலாம். குறிப்பாக அவரது கோட்டா பாடல், பீப் பாடல், பெரியார் பேத்தி பாடல் உள்ளிட்டவை அரசியல் தளத்தை அதிரவிட்ட பாடல்கள். இந்த இசைக்குழுவிற்கு முன்னரும் கூட அவர் பாடிய மோடி மஸ்தான், ஆசாதி, அதன் பின்னர் அவர் சுயாதீன பாடலாக வெளியிட்ட ' என்ஜாய் என் சாமி, வள்ளியம்மா பேரான்டி' போன்றவை பலரது கவனத்தை ஈர்த்தது.

அறிவு - வேடன்: தமிழ் சூழலில் தெருக்குரல் அறிவு எப்படியோ அதுபோலத்தான் கேரளாவில் வேடன். இன்னும் சொல்லப்போனால் தெருக்குரல் அறிவு தமிழ் சூழலில் ஏற்படுத்திய தாக்கத்தை விடவுமே வேடன் கேரளாவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். இவர் மீது பதியப்பட்ட புலி பல் வழக்கில் கூட, அது இலங்கையில் தனக்கு பரிசாக கொடுத்தார்கள் என்று கூறினார். காவல்துறையினர் அவரது வீட்டை சோதனையிட்டு 6 கிராம் கஞ்சா இருப்பதாக கைது செய்தது. அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில், தான் ராவணன் குறித்து பாடல் உருவாக்கியுள்ளதாகவும். இந்த பாடல் வெளியானால் தன்னை வெடி வைத்துக் கூட கொல்ல வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். வேடன் மீது பாஜகவினர் காவல்துறையில் புகார் அளித்து வருகிறார்கள்.
ஆதரவு குரல்கள்: ராப் பாடகர் வேடனின் பாடல்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இணையவாசிகள் தமிழில் அவருக்கு ஆதரவாக குரல்கள் கொடுத்து வருகிறார்கள். நண்பன் என்ற பெயரில் இருக்கும் டிவிட்டர்வாசி ஒருவர் வேடன் குறித்து தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " சமீபத்தில் இந்த பெயர் கேரளம், ஈழ மக்கள், தமிழ்நாடு என தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வேடன் ஒரு தலித், மலையாளி, ஈழ தாய்க்கு பிறந்த மகன் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடையாளத்தை தங்களுக்கு ஏற்றாற்போல் எடுத்துக்கொண்டு வேடனை கொண்டாடி வருகிறார்கள்.

வேடன் பெயர்: வேடனின் அம்மா ஈழ தமிழர், ஈழத்தில் இருந்து ஊட்டிக்கு சென்று பின் கேரளாவில் குடிபெயர்ந்து ஒரு மலையாளியை திருமணம் செய்கிறார். ஹிரன்தாஸ் முரளி பிறக்கிறார். காலனியில் வளர்கிறார். நிறத்தால், சாதியால் பல காயங்களை பெறுகிறார். அநீதியை கண்டு ஆத்திரம் கொள்கிறார். சாதி, மதம், இடதுசாரி, வலதுசாரி, அரசியல் என எல்லாவற்றையும் உள்வாங்கி "வேடனாக" தனக்கு தானே பெயர் சூட்டிக்கொண்டு Rapper ஆக உருவெடுக்கிறார். பாடல் இசையில், குரலில், வார்த்தைகளில் அநீதிக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கிறது. சாதி, மதம், பிரிவினைக்கு எதிராக பாடுகிறார். மலையாளத்தில், தமிழில் பாடுகிறார். ஈழ போராட்டத்தை, பாலஸ்தீனத்தை ஆதரித்து பாடுகிறார். எங்கெங்கு யார் யார் ஒடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்காக பாடுகிறார். வலது சாரிகளை கேள்வி கேட்டு பாடுகிறார்.
இளம் ரத்தம்: பொறுக்குமா சங்பரிவார் கூட்டத்திற்கு? வேடனுக்கு எதிராக புகார், பொய் பிரச்சாரம் என சங்பரிவார் கும்பல் கிளம்ப, வேடனுக்கு ஆதரவாக கேரள இளைஞர்களும், கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் நிற்க, வேடனை எல்லோருக்கும் கொண்டு போய் சேர்த்துவிட்டார்கள் வலதுசாரிகள்! தன் தனிப்பட்ட வாழ்வின் சில தவறுகளை திருத்திக்கொண்டு, வேடன் மெருகேறி வருகிறார். கேரளத்தின் சமூக, அரசியலில் தவிர்க்க முடியாத குரலாக இனி வேடன் பார்க்கப்படுவார். கேரளத்தில் பாடகர் யேசுதாஸிற்கு கூடும் கூட்டத்தை விட வேடனுக்கு கூடும் கூட்டம் அதிகம் என்கிறார்கள், கூட்டம் அலைமோதுகிறது என சிலாகிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவன் பேசும்போதும், எழுதும்போதும், பாடும்போதும் அதில் எப்போதும் ஜீவன் இருக்கும் ! வேடன் கேரளத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிராக வேட்டையாடுகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். ஒடுக்குமுறை எங்கு நடந்தாலும் அதை இளம் ரத்தம் பொறுத்துக் கொள்ளுமா என்ன?


Click it and Unblock the Notifications











