லட்சத்தில் ஒருவருக்கு வரும் நோய் பற்றிய படம் 'பறவை'!
பிரபல மலையாளப் பாடகர் ராஜேஷ் விஜய் இயக்கும் படத்துக்கு பறவை என தலைப்பிடப்பட்டுள்ளது. லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும் அபூர்வ நோயை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாம் இது.
மோகன்லால், பிருத்திவிராஜ், ஜெயசூர்யா படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ராஜேஷ் விஜய்.

இசையமைக்க வந்தவர் இயக்குநர் ஆனார்
இவர் இசைக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். மலையாளத்தில் இசை அமைத்துப் பாடி வீடியோ ஆல்பமும் வெளியிட்டவர். வேறு ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார். மலையாளத்தில் 'கோல்டன் ஐலேண்ட்'என்றொரு படத்துக்கும் இசையமைத்துள்ளார்.
படத்துக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் திரையுலகில் நுழைந்த இவருக்கு, ஒரு உண்மைக் கதை கிடைக்கவே இதைப் படமாக்கினால் என்ன என்கிற உந்துதல் வந்ததாம். நண்பர்கள் தோள் கொடுக்க படக்குழு தயாரானது.

இசையும் காதலும்
"ராஜேஷ் விஜய் சொன்ன கதை பிடித்துப் போனது. இது இசையும் காதலும் கலந்த நல்ல கதை. இதைப் படமாக்கினால் நன்றாக வரும் என்கிற நம்பிக்கை வந்தது. தயாரிக்க முடிவெடுத்து விட்டேன்." என்கிறார் பாபு. சி.என். இவர்தான் ராஜ் சினிமா பேக்டரி சார்பில் 'பறவை' யைத் தயாரிக்கிறார்.

7 பாடல்கள்
ராஜேஷ் விஜய் நாயகனாக நடிக்க அஞ்சனா நாயகியாக நடிக்கிறார். மேலும் ஷில்பா, வீரமணி, முஜீப் மற்றும் பலரும் நடித்துள்ளார்கள். படத்தில் 7 பாடல்கள்.
படத்துக்கு ஒளிப்பதிவு ராகேஷ், படத்தொகுப்பு காளிதாஸ். பாடல்கள் கவிவர்மன், அருண்பாரதி, பத்மாவதி. கதை திரைக்கதை எழுதி இசையமைத்து நாயகனாகவும் நடித்து இயக்கியுள்ளார் ராஜேஷ் விஜய்.

அது என்ன பறவை?
"நம் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் உயிர் கூட ஒரு பறவை போலத்தான். என்று கூட்டைத் திறந்து விடுவார்கள் சிறகடித்து வெளியேறலாம் என்று காத்துக் கிடக்கிறது இந்த உடல் கூட்டைவிட்டு உயிர்ப் பறவை பறப்பதற்கு காரணமாகும் ஒரு நோய்தான் இப்படத்தின் மைய முடிச்சு. இந்தப் படத்தில் வரும் நோய் வழக்கமாக படத்தில் காட்டப்படுவது அல்ல. இது லட்சத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும். நான் சந்தித்த நண்பரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிதான் இது," என்கிறார் இயக்குநர்.
பாண்டிச்சேரி, திருவனந்தபுரம், நாகர்கோவில் போன்ற பகுதிகளில் 56 நாட்களில் படமாக்கப்பட்டு படத்தை முடித்துள்ளார்கள்.
'பறவை' மார்ச் வாக்கில் திரைகளில் சிறகடிக்கவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











