ரயிலில் டிக்கெட் பரிசோதகரை திட்டி, தாக்கிய மலையாள வில்லன் நடிகர் கைது
சென்னை: ரயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கியதற்காக மலையாள வில்லன் நடிகர் மனோஜ் குமார் கைது செய்யப்பட்டார்.
மலையாள வில்லன் நடிகர் மனோஜ் குமார்(50). அவர் நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் ரயிலில் பயணித்தார். அவர் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்த பெட்டியில் பயணம் செய்தார். அப்போது அந்த பெட்டியில் டிக்கெட்டை முன்பதிவு செய்யாமல் சிலர் ஏறினார்களாம்.
இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ் முன்பதிவு செய்யாமல் ஏறியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அறிந்து அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் கிருஷ்ணமூர்த்தி பிரச்சனையை தீர்த்து வைக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது மனோஜ் கிருஷ்ணமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கினாராம். இதையடுத்து ரயில் நள்ளிரவு 1 மணிக்கு ஈரோடு வந்தபோது கிருஷ்ணமூர்த்தி நடந்த சம்பவம் குறித்து ரயில் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் மனோஜ் குமார் கைது செய்யப்பட்டார்.


Click it and Unblock the Notifications











