டக்குனு எழுந்து நின்ற ரஜினி.. திகைத்துப்போன வில்லன் நடிகர்.. வேட்டையன் படப்பிடிப்பில் நடந்தது என்ன!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. சோசியல் மீடியாவில் எந்த பக்கம் பார்த்தாலும் வேட்டையன் படம் பற்றிய பேச்சே இருக்கும் நிலையில், இப்படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் சாபுமோன் அப்துசமத், பட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்தின் 170வது படமான வேட்டையன் படத்தில், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, சர்வானந்த், மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா, அபிராமி, கிஷோர், ரவிமரியா என பலர் நடித்துள்ளனர். ஜெய் பீம் போன்ற படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கி உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பி உள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. வேட்டையன் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. மேலும், படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 47 நிமிடம் என சென்சார் போர்டு அறிக்கை வெளியிட்டது.

வேட்டையன் ரிலீஸ்: ஜெயிலர் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் போலீசாக ரஜினி நடித்துள்ளார். அதுவும் என்கவுண்டர் ஸ்பெஷலிட்டாக நடித்துள்ளார். அதிரடியான வசங்களுடன், அடுத்தடுத்த ட்விஸ்டுகளுடன் வெளியான டிரைலர் படத்தின் மீதான ஹைப்பை மேலும் அதிகரித்துள்ளது. வேட்டையன் படமும், ஜெயிலர் படத்தை போல, அதிரடியான வசூலை நிச்சயம் அள்ளும் என டிரைலரைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் சாபுமோன் அப்துசமத்: இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள மலையாள நடிகர் சாபுமோன் அப்துசமத் படத்தில் ரஜினிகாந்தோடு நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.அதில், வேட்டையன் படப்பிடிப்பு நடந்த கொண்டு இருக்கும் போது, இயக்குனர் ஞானவேல், என்னை ரஜினி சாருக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது, ரஜினிகாந்த் டக்குனு எழுந்து நின்று சார் என்று என்னை அழைத்து, என் தோளைத்தட்டி 'வெல்கம் டு தி தமிழ் இண்டஸ்ட்ரி' என்றார். நான் அவரைப்பார்த்து ஒரு நொடி திகைத்துப்போனேன். அவர் எவ்வளவு பெரிய நடிகர், அவர் என்னைப் பார்த்து எழுந்தது எனக்கு வியப்பாக இருந்தது. அந்த நேரம் எனக்கு பேச்சே வரவில்லை.
சிறந்த தருணம்: அவரிடம் இருக்கும் அந்த பண்பு தான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதனால் தான், அவர் தமிழ் மக்கள் மனதில் இவ்வளவு பெரிய இடத்தை பிடித்து, ஸ்டார் நடிகராக இருக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். இதுதான் என்னுடைய முதல் தமிழ்ப் படம், நான் அவருடன் எட்டு நாட்கள் சேர்ந்து நடித்தேன். ஆனால், அவருடன் ஒரு படம் கூட எடுக்கவில்லை அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கு. ஆனால், அவர் சொன்ன வார்த்தை எப்போதும் என்னுடன் இருக்கும். இது உண்மையிலேயே என் வாழ்க்கையில் சிறந்த தருணம் என்று மலையாள நடிகர் சாபுமோன் அப்துசமத் வேட்டையன் பட அனுபவத்தை அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











