சினிமாவை அழிக்க நினைச்ச உங்களை... ஒரு தயாரிப்பாளரின் டச் போஸ்ட்!
கொச்சி: சினிமாவை சீர்குலைக்க நினைத்தவர்களை ஒரு போதும் மறக்க மாட்டேன் என்று மம்மூட்டி நடித்துள்ள 'மாமாங்கம்' படத்தின் தயாரிப்பாள்ர் வேணு குணப்பிள்ளி தெரிவித்துள்ளார்.
மம்மூட்டி நடித்துள்ள மலையாள படம், 'மாமாங்கம்'. 17 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையான இதில், பிராச்சி தேஹ்லன், உன்னி முகுந்தன், பிராச்சி தேசாய், இனியா, மாளவிகா மேனன், கனிகா உட்பட பலர் நடித்துள்ளனர்.

முதலில், இந்தப் படத்தை கதாசிரியர் சஜீவ் பிள்ளை இயக்கினார். அவருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஷூட்டிங் தள்ளிப் போனது. பின்னர் அவர் மாற்றப்பட்டு எம்.பத்மகுமார் இயக்கினார்.
காவ்யா பிலிம் கம்பெனி சார்பில் வேணு குணப்பிள்ளி தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. தமிழ்ப் பதிப்புக்கு இயக்குனர் ராம் வசனம் எழுதியுள்ளார். படம் கடந்த 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர் வேணு குணப்பிள்ளி, ஒரே நாளில் ரூ.23 கோடி வசூலித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேஸ்புக்கில் அவர், 'கிட்டத்தட்ட இரண்டு வருட பயணத்துக்குப் பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை வரை, ரூ.23 கோடி வசூலித்துள்ளது.
ஆச்சரியங்கள் மற்றும் புதுமைகள் நிறைந்த சினிமாவை சிலர் அழிக்க நினைத்தாலும் நாங்கள் வென்றுள்ளோம். இது ஆயிரக்கணக்கான மக்களின் கடின உழைப்பாலும் கோடிக்கணக்கான பணத்தாலும் உருவாக்கப்பட்ட, படைப்பு.
இந்தப் படத்துக்காக என்னுடன் இருந்தவர்களையும் ஆரம்பத்தில் இருந்தே படத்தை சீர்குலைக்க முயன்றவர்களையும் நினைவு கொள்கிறேன். இந்தப் படம் வருங்கால மெகா பட்ஜெட் படங்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











