பாலா சார் என்னை டார்ச்சர் பண்ணல.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேமலு ஹீரோயின் மமிதா பைஜு!
சென்னை: பிரேமலு படத்தில் நடித்து சர்வதேச அளவில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார் மமிதா பைஜு. இந்த மாதம் தொடக்கத்தில் காதலர் தினத்தை குறி வைத்து வெளியான பிரேமலு திரைப்படம் 70 கோடி வசூலை தாண்டி 100 கோடி வசூலை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் மலையாளத்தில் எடுத்த பேட்டி ஒன்றில் பேசிய மமிதா பைஜு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்க காத்திருந்தேன். அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது பாலா ஒரு விஷயத்தை நான் கற்றுக் கொண்டிருக்கும் போது, டைம் இல்லை சீக்கிரம் பண்ணு என தட்டினார் என பேசியிருந்தார்.

இளம் நடிகையை இயக்குநர் பாலா எப்படி அடிக்கலாம் என பிரேமலு பாய்ஸ் சோஷியல் மீடியாவில் பொங்க ஆரம்பித்த நிலையில், அது பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.
நடிகர்கள் நடிகைகளை அடிப்பாரா பாலா?: இயக்குநர் பாலா சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, தார தப்பட்ட, நாச்சியார், வர்மா என பல படங்களை இயக்கிய அவர் வணங்கான் படத்தை சூர்யாவை வைத்து ஒரு முறையும் அருண் விஜய்யை வைத்து இன்னொரு முறையும் இயக்கி உள்ளார். பாலா நடிகர்கள் நடிகைகளை போட்டு அடிப்பார் என்கிற குற்றச்சாட்டு நான் கடவுள், பரதேசி படங்களின் சமயத்திலேயே எழுந்தது. ஆனால், பாலா பட்டறையில் தீட்டப்படும் நடிகர்கள் சினிமாவில் நல்லாவே ஷைன் ஆவார்கள் என்பதால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னணி நடிகர்கள் பாலா படத்தை தவிர்க்க காரணமும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் திட்டுவார், அடிப்பார் என்பதால் தான் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
மமிதாவை அடித்தாரா பாலா?: பிரேமலு படத்தின் மூலம் மலையாள சினிமாவை தாண்டி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் மமிதா பைஜு. அவரது அழகான முகம் மற்றும் க்யூட்டான சிரிப்புக்கு இங்கே ஏகப்பட்ட இளைஞர்கள் அடிமைகளாக மாறி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பாலா தன்னை அடித்தார் என்பது போல மமிதா பைஜு பேசிய வீடியோ காட்சிகள் தீயாக பரவி சர்ச்சையை கிளப்பியது.
மமிதா பைஜு மறுப்பு: இந்நிலையில், செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பாலா தன்னை தகாத முறையில் நடத்தவில்லை. தன்னை எந்த வகையிலும் துன்புறுத்தவில்லை. நான் பேசிய பெரிய பேட்டியில் ஒரு சின்ன பிட்டை மட்டும் எடுத்துப் போட்டு அதை பெரிய விஷயமாக மாற்றி விட்டனர். அதை நான் முழுமையாக மறுக்கிறேன். பாலாவுடன் 1 வருடம் வேலை பார்த்துள்ளேன். அவருடைய அசிஸ்டன்ட் டைரக்டர்கள் டீம் என்னை நன்றாகவே கவனித்துக் கொண்டனர். மற்றவர்களுக்கு கொடுத்ததை விட அதிகமாக ஃப்ரீடத்தை எனக்கு பாலா கொடுத்தார் என்றார்.
வணங்கான் படத்தில் இருந்து விலக காரணம் என்ன?: மேலும், வணங்கான் படத்தில் இருந்து ஏன் விலகினீர்கள் என்கிற கேள்விக்கு சூர்யா சார் விலகியதும் மீண்டும் அந்த படம் எப்படி உருவாகும் என்கிற எண்ணம் இருந்தது. மேலும், மறுபடியும் ஒரு 6 மாத காலம் கால்ஷீட் தேவைப்படும் என்றனர். ஏற்கனவே ஒரு படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கிய நிலையில், அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன் என மமிதா பைஜு விளக்கம் அளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். ஆனால், பாலா தன்னை அடித்தார் என பேசியதற்கு அவர் சரியான விளக்கத்தை கொடுக்கவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











