மாண்டலின் சீனிவாஸ் மறைவு, பிரதமர், முதல்வர் இரங்கல்: இசையமைப்பாளர்கள் கண்ணீர் அஞ்சலி
சென்னை: பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இசைத்துறையில் சீனிவாஸின் நீண்ட கால பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கலை காலத்தால் அழியாதது. என்றும் அவர் நினைவைவிட்டு நீங்க மாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.மாண்டலின் என்ற இசைக் கருவியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய பெருமைக்குரியவர் சீனிவாஸ்.
இசைக் குடும்பத்தில் பிறந்த மாண்டலின் சீனிவாஸ் தன்னுடைய மாண்டலின் இசைக் கருவி மூலம் பாடல்களை ஒலிக்கச் செய்து, இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். மத்திய அரசின் "பத்மஸ்ரீ", "சங்கீத ரத்னா" உள்பட பல விருதுகளைப் பெற்றவர்.
மாண்டலின் சீனிவாஸ் மறைவு கர்நாடக இசைத் துறைக்கு மிகப் பெரிய இழப்பாகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மாண்டலின் சீனிவாஸ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரகுமான் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, சீனிவாஸின் மரணச் செய்தி, என்னை மிகவும் பாதித்து விட்டது. எல்லாம் வல்ல இறைவன், அவருக்கு அந்த உலகத்திலும் பெருமகிழ்ச்சியை வழங்கட்டும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்
மாண்டலின் சீனிவாஸ் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் எனக்கு மட்டுமல்லாது, இளைய தலைமுறையினர் பலருக்கும், தங்களுடைய குழந்தை பருவத்தில் இசை கற்க உத்வேகமாய் இருந்தவர்.
நடிகை குஷ்பூ
திறமைகள் பல உடையவர் மாண்டலின் சீனிவாஸ் அவரின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என்று குஷ்பு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாடகர் சீனிவாஸ்
வாழ்க்கை மிக கொடூரமானது. ஒரு இசைமேதை, இளம்வயதிலேயே இயற்கை எய்தியுள்ளார். அவர் இருந்திருந்தால், இசை உலகில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தியிருப்பார் என்று பாடகர் சீனிவாஸ் குறிப்பிட்டுள்ளார்.
பாடகி சின்மயி
சிறுவயதிலேயே இசை மேதையாக திகழ்ந்தவர் சீனிவாஸ். அவருக்கு மரணம் என்பது துரதிருஷ்டவசமானது என்று பாடகி சின்மயி குறிப்பிட்டுள்ளார்.
பாடகி ஸ்வேதா மோகன்
மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுச் செய்தி, இன்று காலையில் கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது. அவரின் மரணம் என்னை மீளாத் துயருக்குள்ளாக்கியுள்ளது என்று பாடகி ஸ்வேதா மேனன் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











