Mani Ratnam Net Worth: 67வது பிறந்தநாள் கொண்டாடும் மணிரத்னம்.. சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
சென்னை: பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய பாணி கதைகளை சொல்லும் இயக்குநராக அறிமுகமாகி பலரது கனவுப் படமான பொன்னியின் செல்வன் கதையை கண் முன் திரைப்படமாக காட்டிய இயக்குநர் மணிரத்னம் இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
காதல் படங்களை பிரம்மாண்ட திரைக்கதையில் கையாள்வதில் கைதேர்ந்த இயக்குநர் மணிரத்னம் என்றால் அது மிகையாகாது.
சோழர் குலத்தையே அழிக்க வந்தவள் நந்தினி என பலர் நினைத்துக் கொண்டிருக்கையில், ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்கும் இடையே ஏற்பட்ட காதல் போராட்டம் தான் பொன்னியின் செல்வனே என திரையில் காட்டி இருந்தார்.

மணிரத்னம் படத்தில் நடித்தால் தான் நல்ல நடிகர்களே என்கிற எண்ணமே பல நடிகர்களுக்கு இன்னமும் இருந்து வரும் சூழலில், இயக்குநர் மணிரத்னம் சேர்த்து வைத்துள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம் வாங்க..
மணிரத்னம் பிறந்தநாள்: தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் எப்போதுமே தனக்கென ஒரு சிம்மாசனத்தை போட்டு நாயகனாக அமர்ந்திருக்கும் இயக்குநர் மணிரத்னத்தின் 67வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
1956ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி மதுரையில் பிறந்த கோபால ரத்னம் சுப்பிரமணியம் தான் இயக்குநர் மணிரத்னமாக இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருகிறார். மணிரத்னத்தின் பிறந்தநாளை முன்னிட்டு #ManiRatnam ஹாஷ்டேக் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.
ஸ்க்ரீனில் மேஜிக்: பகல் நிலவு, இதயக் கோயில், மெளன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், இருவர், உயிரே, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டாள், ஆயுத எழுத்து, குரு, ராவனன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 என இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அத்தனை படங்களுமே ஸ்க்ரீனில் மிகப்பெரிய மேஜிக்கை செய்துள்ளது.

சொத்து மதிப்பு: மெட்ராஸ் டாக்கீஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி படங்களை தயாரித்து வருகிறார் மணிரத்னம். லைகா நிறுவனத்துடன் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தையும் தயாரித்து இருந்தார்.
இயக்குநராக ஒரு படத்துக்கு 22 கோடி வரை மணிரத்னம் புதிய படங்களுக்கு சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக அவரிடம் 140 கோடி வரை சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை சுஹாசினியை திருமணம் செய்துக் கொண்ட மணிரத்னத்துக்கு ஒரு மகன் உள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வீட்டில் வெகு நாட்களாக தங்கி வருகிறார் மணிரத்னம்.


Click it and Unblock the Notifications











