பெண்களுக்கு தயிர் சாதமே போதும்.. அடக்குமுறை குறித்து மனம் திறந்த மணிரத்னம் மனைவி
சென்னை: பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கிய அனைத்து படங்களும் இந்திய அளவில் பேசப்படுபவை. சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை இயக்கினார். அடுத்ததாக அவர் இயக்கத்திலேயே அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வரவிருக்கிறது. இவர் சுஹாசினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி
சுஹாசினி கமல் ஹாசனின் அண்ணன் மகள் ஆவார். இவர் 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இவருக்கும் மணிரத்னத்திற்கும் 1988ஆம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நந்தன் என்ற மகன் இருக்கிறார். வெளிநாட்டில் சினிமா தொடர்பான படிப்பை படித்துவருகிரார் நந்தன்.

படம் இயக்கிய சுஹாசினி மணிரத்னம்
சுஹாசினி நடிகையாக மட்டுமின்றி இயக்குநராகவும் அறியப்படுபவர். இவர் 1995ஆம் ஆண்டு அவரது தங்கையான அனுஹாசனை வைத்து இந்திரா என்ற படத்தை இயக்கினார். படம் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. அதேபோல் இயக்குநர் மட்டுமின்றி வசனகர்த்தாகவும் பணியாற்றியிருக்கிறார். மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்திற்கு வசனம் எழுதியது சுஹாசினி என்பது கவனிக்கத்தக்கது.

கூட்டு குடும்பத்தில் சுஹாசினி
இந்நிலையில் சுஹாசினி மணிரத்னம் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்தார். அந்தப் பேட்டியில், "எனக்கும் மணிரத்னத்திற்கும் திருமணம் முடிந்ததும் நாங்கள் கூட்டு குடும்பமாகத்தான் வாழ்ந்து வந்தோம். ஆனால் மணிரத்னத்தின் அண்ணன் தனியாக சென்றுவிட்டார். அதன் காரணமாக நான், எனது கணவர் மற்றும் மகன் ஆகிய மூன்று பேர்தான் அங்கு இருக்கிறோம்.

அடக்குமுறை குறித்து மனம் திறந்த சுஹாசினி
எங்கள் வீட்டில் சமையலை கவனித்துக்கொள்வதற்காக வயதான அம்மா ஒருவரை வைத்திருக்கிறோம். ஒருமுறை மணிரத்னம் வீட்டில் இல்லாத சமயத்தில் அந்த அம்மாவிடம் சப்பாத்தி குருமா, பருப்பு உசிலி என ருசியாக சமைத்து சாப்பிடலாம் என்று கேட்டேன். ஆனால் அவரோ அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
அப்போ என்ன சாப்பிடலாம் என கேட்டேன். அதற்கு அவர், சார்தான் ஊர்ல இல்லையே நாம் தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு தூங்கலாம் என்றார். சார் இல்லைனா என்ன நாம சாப்பிடலாமே என்றேன். அதெல்லாம் இல்லை சார் இருக்கும்போது சமைக்கலாம் என சொல்லிவிட்டார். அவர் சொல்லியது எப்படி இருந்தது என்றால் பெண்களுக்கு எதற்காக வாய்க்கு ருசியாக சாப்பாடு என்பது போல் இருந்தது. அது எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது" என கூறினார்.


Click it and Unblock the Notifications











