'மன்னிப்பு' கேட்ட மணிரத்னம்!

மணிரத்னத்தின் முன்னாள் தயாரிப்பு நிர்வாகியும், மாதவன், த்ரிஷா ஆகியோரின் மேனேஜருமான நஸீர் முதல் முறையாக தயாரிப்பாளராகியுள்ளார். படத்தின் பெயர் களவாணி. பசங்க படத்தில் அறிமுகமான விமல்-கேரளாவைச் சேர்ந்த ஓவியா ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது. இயக்குநர் மணிரத்னம் ஆடியோவை வெளியிட்டார். இயக்குநர் சசிகுமார் பெற்றுக்கொண்டார்.
விழாவில் பேசிய மணிரத்னம், தன்னிடம் நஸீர் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த காலத்தில், தனது இயக்கத்தில் ஏற்படும் தவறுகளுக்காகக் கூட நஸீரிடம் கோபித்துக் கொண்டதாகவும் அதற்காக இந்த மேடையில் மன்னிப்புக் கேட்பதாகவும் தெரிவிக்க, அதைக் கேட்டு கண் கலங்கினார் நஸீர்.
விழாவில் கலந்துகொண்ட நடிகர்-இயக்குநர் பார்த்திபன், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பாடல் ஆசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் ஆகிய மூவரும் நிஜவாழ்க்கையில் தாங்கள் செய்த 'களவாணித்தனங்கள்' பற்றிப் பேசி கலகலப்பூட்டனர்.
நடிகைகள் திரிஷா, சரண்யா, இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், டைரக்டர் விஜய் ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டு பேசினார்கள்.
நசீர் வரவேற்று பேசினார். இயக்குநர் சற்குணம் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை, நடிகர் இளவரசுவும், பாடகி சின்மயியும் தொகுத்து வழங்கினார்கள்.


Click it and Unblock the Notifications











