Manisha Koirala - நான் நடிக்காமலே இருந்திருக்கலாம் - மனம் திறந்த மணிரத்னம் பட ஹீரோயின்
மும்பை: Manisha Koirala (மனிஷா கொய்ராலா) நான் நடிக்காமலே இருந்திருக்கலாம் நடிகை மனிஷா கொய்ராலா உருக்கத்துடன் தெரிவித்திருக்கிறார்.
நேபாளத்தை சேர்ந்த மனிஷா கொய்ராலா சௌதாகர் என்ற ஹிந்தி படத்தின் மூலம் 1991ஆம் ஆண்டு திரையுலகுக்கு அடியெடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் நடித்த அவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய் படத்தின் மூலம் எண்ட்ரி ஆனார். பாபர் மசூதி இடிப்பை மையமாக வைத்து உருவான அந்தப் படத்தில் சாய்ரா பானு கேரக்டரில் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

ஷங்கரின் இந்தியன், முதல்வன்: அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்திலும், முதல்வன் படத்திலும் நடித்தார். தொடர்ந்து ரஜினிகாந்த்துடன் பாபா, கமல் ஹாசனுடன் ஆளவந்தான், மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களிலும் நடித்தார். தமிழில் கடைசியாக தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் ஹன்சிகா மோத்வானிக்கு அம்மா ரோலில் நடித்தார். தமிழில் சில படங்களில் நடித்தாலும் ஹிந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார்.
புற்றுநோய்: ஒருகட்டத்தில் மனிஷா கொய்ராலாவுக்கு புற்று நோய் வந்தது. இதனால் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். தொடர்ந்து சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்த அவர் ஹிந்தியில் நடித்துவருகிறார். தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகிவரும் வெப் சீரிஸான ஹீராமண்டியில் கமிட்டாகியிருக்கிறார். நெட் ஃப்ளிக்ஸில் ரிலீஸாகவிருக்கும் இதில் சோனாக்ஷ் சின்ஹா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.
ஆணாதிக்கம் நிறைந்த திரைத்துறை: இந்நிலையில் மனிஷா கொய்ராலா சமீபத்தில் அளித்த பேட்டியில், "திரைத்துறை என்பது ஆணாதிக்கம் நிறைந்தது. அதனால் நடிகைகளுக்கு தங்களை நிரூபிக்க குறைந்த அளவிலான வாய்ப்புகளே இருக்கின்றன. ஆனால் சஞ்சய் லீலா பன்சாலி ஒரு விதிவிலக்கு. அவர் படத்தில் நடிப்பது என்பது மகிழ்ச்சியைத் தரக்கூடியது. ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை இயக்குவதில் அவருக்கு நிகர் அவரே.
திருப்புமுனை தந்த படங்கள்: என் திரைவாழ்வில் ஏ லவ் ஸ்டோரி, பம்பாய், கம்பெனி போன்ற திரைப்படங்கள் திருப்புமுனைகளாக இருந்தன. இப்போது 20 ஆண்டுகளுக்குப் பின்னர், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நான் நடித்துள்ள ஹீராமண்டி பெரிய திருப்புமுனையாக அமையப்போகிறது. என்னைப் பொறுத்தவரையில் வெற்றி என்பது நான் என்ன செய்ய நினைக்கிறேனோ அதை எந்த நேரத்திலும் சுதந்திரமாக செய்ய வேண்டும் என்பதுதான். அந்த சுதந்திரம் எனக்கு இருக்கிறது.

நடிக்காமல் இருந்திருக்கலாம்: என் ஆரம்ப நாட்களில் என்னைச் சுற்றி இருந்தவர்கள் கேலண்டரில் அடுத்த மூன்று வருடங்களுக்காவது புக் ஆகி பிஸியாக இருந்தால்தான் பிரபலமான நடிகையாக அறியப்படுவேன் என்று கூறினார்கள். நானும் அப்படித்தான் பிஸியாக இருந்தேன். ஆனால் அந்த பரபரப்புக்காக நான் செய்த படங்களில் சில மோசமானவை. அவற்றில் நடித்ததற்குப் பதிலாக நான் நடிக்காமலேயே இருந்திருக்கலாம். அந்த நேரத்தை குடும்பத்தாருடனோ அல்லது எனக்கு பிரியமானவர்களுடனோ செலவழித்திருக்கலாம்" என்றார்.


Click it and Unblock the Notifications











