மணிவண்ணன் எனும் பன்முகக் கலைஞன்!- சத்யராஜ் புகழாரம்
கோவை: மறைந்த திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் பன்முகத் தன்மை கொண்ட கலைஞராகத் திகழ்ந்தவர் என நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.
உலக மனிதாபிமானக் கழகம் சார்பில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இயக்குநர் மணிவண்ணன் எழுதிய கவிதை தொகுப்பான "மணித் துளிகள்' என்ற நூலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, நடிகர் சத்யராஜ் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியது:
பெரியார், மார்க்ஸ் ஆகியோர் சமுதாய மாற்றத்திற்காகப் பாடுபட்ட புரட்சியாளர்கள். அவர்களது சிந்தனை வழியில் வாழ்ந்து மறைந்தவர் இயக்குநர் மணிவண்ணன்.
தனிமனித லட்சியங்களைத் தவிர்த்து சமுதாய மாற்றத்திற்கான லட்சியங்களுடன் வாழ்ந்த அவர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை, வசனகர்த்தா, நகைச்சுவையாளர் என பன்முக சிந்தனையாளராகத் திகழ்ந்தவர்.
இயக்குநர் மணிவண்ணன் வாழ்ந்த வரை அவர் கவிஞர் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. திரைப்பட நடிகராக என்னை உருவாக்கியதில் இயக்குநர் மணிவண்ணனுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது.
ஒருவர் சமுதாயத்தில் கொண்டுள்ள சிந்தனையை குடும்பத்தில் செயல்படுத்துவது கடினமானது. ஆனால் குடும்ப வாழ்க்கையிலும் அதனைச் செயல்படுத்தியவர் மணிவண்ணன்,"என்றார்.
எழுத்தாளர் பாமரன் பேசுகையில், "இயக்குநர் மணிவண்ணன் மாற்றுக் கொள்கை கொண்டவர்களையும் மதிக்கக் கூடியவராகத் திகழ்ந்தவர். தனது கொள்கையில் இறுதிவரை சமரசம் செய்து கொள்ளாதவராக அவர் இருந்தார்," என்றார்.


Click it and Unblock the Notifications











