நடிக்கத் தெரியவில்லை... குண்டைப் போட்ட இயக்குநர்.. "கேஸ்" போடும் நடிகை மாலாஸ்ரீ !
பெங்களூரு: தனது கவுரவத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, நடிக்கத் தெரியவில்லை எனப் புகார் கூறிய இயக்குநர் இம்ரான் மீது மானநஷ்ட வழக்குத் தொடர நடிகை மாலாஸ்ரீ முடிவு செய்திருப்பதாக அவரது கணவரும், பிரபல கன்னடப்படத் தயாரிப்பாளருமான ராமு தெரிவித்துள்ளார்.
"கன்னட விஜயசாந்தி' என்று புகழப்படும் நடிகை மாலாஸ்ரீ. இவரது படங்களில் அடிதடி சற்று தூக்கலாகவே இருக்கும்.
இந்நிலையில், உப்பு -ஹூளி -காரா என்ற படத்தில் மாலாஸ்ரீயை ஒப்பந்தம் செய்தார் இயக்குநர் இம்ரான். ஆனால், இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில், மாலாஸ்ரீக்கு நடிப்பு வரவில்லை என, அப்படத்தையே நிறுத்திவிட்டதாக இம்ரான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மானநஷ்ட வழக்கு...
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இம்ரான் மீது மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாக மாலாஸ்ரீயின் கணவரும், பிரபல கன்னடப் படத் தயாரிப்பாளருமான ராமு தெரிவித்துள்ளார்.

உப்பு - ஹூளி - காரா...
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "நானும், பல திரைப்படங்களை தயாரித்துள்ளேன். எந்த கலைஞரையும் தனிப்பட்ட முறையில் அவமதித்ததில்லை. ஆனால், உப்பு- ஹூளி- காரா திரைப்படத்தில், மாலாஸ்ரீ தான் நடிக்க வேண்டுமென விரும்பி, கதையை கூறி அவரை சம்மதிக்க வைத்தனர்.

களங்கம்...
இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பின், 'மாலாஸ்ரீக்கு நடிப்பு வரவில்லை. இதனால் திரைப்படத்தையே நிறுத்திவிட்டோம்' என, கூறினால் என்ன அர்த்தம்? மாலாஸ்ரீயின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், இயக்குனர் இம்ரான் சர்தாரியாவும், தயாரிப்பாளர் மஞ்சுவும் சேர்ந்து சதி செய்துள்ளனர்.

வேதனை...
கடந்த சில நாட்களாக, மாலாஸ்ரீ மீது ஊடகங்களில் வெளியாகும் பொய்யான குற்றச்சாட்டுகளால் வேதனை அடைந்துள்ளோம். எனவே இம்ரான், மஞ்சு ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளோம். இந்த இருவரும், மாலாஸ்ரீக்கு எதிராக சுமத்திய பொய்யான குற்றசாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











