போடு வெடிய.. மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநருடன் கைகோர்க்கிறாரா தனுஷ்?
சென்னை: கேரளாவில் சமீபத்தில் வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். சிதம்பரம் பொடுவல் இயக்கியிருந்த அந்தப் படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் சக்கைப்போடு போட்டுவருகிறது. தமிழ்நாட்டின் பல திரையரங்குகளில் அப்படம் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக சென்றுகொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரத்துடன் தனுஷ் இணையவிருப்பதாக புதிய தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் நல்ல படங்களே சமீபகாலமாக வருவதில்லை. ரத்தம், துப்பாக்கி, வன்முறை கலந்துதான் வருகிறது என்று ரசிகர்களிடம் பலமாகவே கருத்து எழ ஆரம்பித்திருக்கிறது. அதேசமயம் மலையாள திரையுலகில் சமீபமாக வரும் படங்கள் அட்டகாசமாக இருக்கின்றன. கண்ணூர் ஸ்குவாட், பிரமயுகம் உள்ளிட்ட படங்கள் கேரளாவை தாண்டி பிற மாநிலங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றன. அந்தவகையில் மலையாளத்தில் இன்னொரு சூப்பர் படமாக வந்திருப்பதுதான் மஞ்சும்மல் பாய்ஸ்.

மஞ்சும்மல் பாய்ஸ்: சிதம்பரம் பொடுவல் இயக்கத்தில் சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம்தான் மஞ்சும்மல் பாய்ஸ். மஞ்சும்மல் ஊரை சேர்ந்த நண்பர்கள் கோவா செல்ல டூர் பிளான் போட்டு கடைசியில் கொடைக்கானலுக்கு செல்கின்றனர். அங்கு குணா குகையில் சிக்கிக்கொள்ளும் அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். சர்வைவல் ஜானரில் வெளியாகியிருந்தாலும் படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் செம ரெஸ்பான்ஸ்: சந்தானபாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான குணா படத்தில் 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் கொடைக்கானலில் ஒரு குகையில் எடுக்கப்பட்டது. அதற்கு பிறகு அந்தக் குகை குணா குகை என்றே அழைக்கப்படுகிறது. அந்தக் குகையை மையமாக வைத்தும்; படத்தில் முக்கியமான இடத்தில் 'கண்மணி அன்போடு காதலன்' பாடலை இடம்பெற செய்ததும் தமிழ் ரசிகர்களை படத்துடன் ரொம்பவே கனெக்ட் ஆக செய்திருக்கிறது. இதன்காரணமாக படத்துக்கு கோலிவுட் ரசிகர்கள் தங்களது பலத்த பாராட்டை கொடுத்துவருகிறார்கள்.
கமலுடன் சந்திப்பு: இந்தச் சூழலில் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினர் கமல் ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்தையும் பாராட்டையும் பெற்றார்கள். அவர்களிடம் படம் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார் கமல் ஹாசன். படத்தின் இயக்குநர் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்பதும் கவனிக்கத்தக்கது. பிறகு குணா படத்தை இயக்கிய சந்தானபாரதி, கமல் ஹாசன் மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினர் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
தொடர் சந்திப்பு: கமல் ஹாசன் மட்டுமின்றி மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரத்தை நடிகர்கள் தனுஷ், விக்ரம் உள்ளிட்டோரும் நேரில் சந்தித்து தங்களது பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்தனர். இந்தப் படத்தின் மூலம் சிதம்பரத்துக்கு தமிழ்நாட்டில் நல்ல அடையாளம் கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக அவர் விரைவில் தமிழில் படம் இயக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
தனுஷுடன் கூட்டணி?: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி சிதம்பரம் தமிழில் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கதைக்களம் கண்டிப்பாக வித்தியாசமானதாகவும் புதிதாகவும் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. முன்னதாக மஞ்சும்மல் பாய்ஸ் படமானது தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாயை வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











