இது ரெட் அலர்ட்.. மஞ்சும்மெல் பாய்ஸ் 90 கோடி வசூல்!.. சுதாரிக்குமா தமிழ் சினிமா?
சென்னை: மலையாள திரைப்படங்கள் மலையாளத்திலேயே 10 கோடி வசூலை தாண்டுவது சில பெரிய நடிகர்களின் படங்களுக்கும், சில சூப்பர் ஹிட் படங்களுக்கு மட்டுமே சாத்தியம். மோகன்லால், மம்மூட்டி முதல் பல பிரபல நடிகர்கள் நடித்த படங்களே தமிழ்நாட்டில் 10 கோடி வசூலை தாண்டாத நிலையில், சிதம்பரம் இயக்கத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 10 கோடி வசூலை தமிழ்நாட்டில் அடைந்துள்ளது.
இது தமிழ் சினிமாவுக்கான ரெட் அலர்ட் என்றே சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. தமிழில் இந்த ஆண்டு வெளியான பல படங்கள் 10 கோடி ரூபாய் வசூலை இங்கேயே ஈட்டவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மையாக மாறியிருக்கிறது.

இதே நிலை சம்மர் முடியும் வரை தொடரும் என்றும் ஒரு உருப்படியான படத்தை கூட இந்த ஆண்டு முதல் பாதியில் தமிழ் சினிமா இறக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அலற விடுகின்றனர்.
குணா படம்: 1991ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி வெளியான குணா படத்தை பார்த்து விட்டு குணா குகை என பெயர் வைக்கப்பட்ட இடத்திற்கு சென்ற நண்பர்களில் ஒருவர் குகையின் பள்ளத்தில் விழுந்து விட, இன்னொரு நண்பர் தனது உயிரை பணையம் வைத்து நண்பர்களுடன் மீட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ். மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற “கண்மணி அன்போடு காதலன்” படத்தின் பாடலை கிளைமேக்ஸில் வைத்த இடம் மலையாள ரசிகர்களை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
90 கோடி வசூல்: இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் நடித்து வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 7 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், 2வது வார முடிவில் 90 கோடி வசூலை கடந்துள்ளது. அடுத்த வாரத்துக்குள் 100 கோடி வசூலை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாளத்திலேயே சரியான போட்டி: இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் 75கோடி வசூலை தாண்டி விட்டது. அடுத்து வெளியான மம்மூட்டியின் பிரேமயுகம் படம் 60 கோடி வசூலை எட்டியுள்ளது. அதற்கு பின் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் அதிரடியாக 90 கோடி வசூலை கடந்து சரியான போட்டியாக அமைந்துள்ளது.

ரெட் அலர்ட்: பிற மொழி படங்கள் தமிழில் டப் செய்து தான் இங்கே ஓடும். பிற மொழியில் வெளியாகும் படங்கள் எல்லாம் பெரிதாக தியேட்டர்களில் ஓடாது. ஆனால், ஓடிடி கலாச்சாரம் வந்த நிலையில், பல மலையாள படங்களை டிவியில் பார்க்க ஆரம்பித்த ரசிகர்கள் தற்போது மஞ்சுமெல் பாய்ஸை தமிழ்நாட்டிலேயே பட்டித் தொட்டி என பல ஊர்களிலும் தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக சென்று பார்க்க ஆரம்பித்துள்ளனர். இது தமிழ் சினிமாவுக்கான ரெட் அலர்ட் என சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரேமம் படத்துக்குப் பிறகு: நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் நடிப்பில் வெளியான பிரேமம் படத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் ரசிகர்களை கவர்ந்து மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ஓடுகிறது. கமல்ஹாசனின் குணாவை மையமாக வைத்து உருவான நிலையில், இப்படியொரு ஈர்ப்பு என்கின்றனர். இதே நிலை தொடருமா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும். கங்குவா, இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் சம்மருக்கு வெளியானால் தான் தமிழ் சினிமா மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











