மாஸ் காட்டும் மஞ்சும்மல் பாய்ஸ்..கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிகவசூல்..தமிழ் ரசிகர்களுக்கு செம ட்ரீட்
சென்னை: கொடைக்கானலில் குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மலையாள படமான 'மஞ்சும்மல் பாய்ஸ். கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான இந்த படத்திற்கு மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் ஒரே நாளில் கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத் திரைப்படங்கள் ஆண்டு தோறும் ஏதோஒரு வித்தியாசமான கதையை கொடுத்து தமிழ் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருவதால், மலையாள திரைப்படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். பிரேமம், ஹிருதயம்,2018, மின்னல் முரளி, க்ரூப், ஐயப்பனும் கோஷியும் என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்களின் வரிசையில் தற்போது,மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இணைந்துள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானலில் உள்ள குணா குகையில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள மலையாளப் திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். கேரளாவின் மஞ்சும்மல் பகுதியிலிருந்து கொடைக்கானலுக்கு 11 நண்பர்கள் சுற்றுலா வருகிறார்கள். அவர்களில் ஒருவன், அந்த குகையில் இருந்த பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்துவிட அவருக்கு என்ன ஆனது? நண்பர்களால் காப்பாற்றப்பட்டாரா? என்பதுதான் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் கதை.
குவியும் பாராட்டு: மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். மலையாள படத்தில் 60% தமிழ் பேசுவது மட்டுமல்லாமல், இந்த படத்தின் கதை தமிழ்நாட்டில் நடப்பதால் இங்கும் நன்றாக ஓடுகிறது. இந்த படத்தில் உலகநாயகன் கமலஹாசனின் குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடலும் இடம்பெற்றது தான் ஹைலைட். இந்த படம் பார்த்த உலக நாயகன் கமல்ஹாசனும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார்.
விரைவில் 100 கோடி: மேலும் 'மஞ்சும்மல் பாய்ஸ்' ஒரே நாளில் கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் டப்பிங் இல்லாமல் படம் திரையிடப்பட்டாலும், பல்வேறு திரையரங்குகளில் ஏராளமான காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளன. குறிப்பாக படம் வெளியாகி 11வது நாளில் தமிழ்நாட்டில் மட்டும் மூன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், உலக அளவில் 7 நாட்களில் மட்டும் 50 கோடியை வசூலித்துள்ளதாக மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நல்ல வரவேற்பு: இந்தப் படம் தமிழ்நாட்டிலும் வசூலை அள்ளி வருவது குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க செயலாளர் திருச்சி ஸ்ரீதரிடம் கேட்டபோது, கடந்த வாரமும் இந்த வாரமும் வெளியான எந்த தமிழ்ப் படத்துக்கும் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கு வரவேற்பு கிடைத்துவருவதால், ஸ்கிரீன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











